சென்னையில் தொடர்ந்து தடம் புரளும் ரயில்கள்அதிகாரிகள் மெத்தனம் - பயணிகள் கடும் அவதி
சென்னை:சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில்கள் தடம் புரளுவது தொடர் கதையாகியுள்ளது. இதுகுறித்து உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் சமீப காலமாக பயணிகள் விரோதப் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதலில் மின்சார ரயில்களின் நேரங்களை மாற்றி பயணிகளின் கோபத்தை தெற்கு ரயில்வே சம்பாதித்துக் கொண்டது. பின்னர் நேரத்தை மீண்டும் மாற்றினர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்டிரல் ரயில் நிலையத்தில் பெரும் அராஜகம் அரங்கேறி வருகிறது. நேற்று முன்தினம், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதனால் பல வெளியூர் ரயில்கள் கிளம்புவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. பல ரயில்கள் நேற்று காலைதான் புறப்பட்டுச் சென்றன.
தடம் புரண்ட பகுதியை சரி செய்வதில் அதிகாரிகள் கடும் மெத்தனம் காட்டியதாகவும், ரயில்கள் தாமதம் குறித்து உரிய முறையில் பயணிகளுக்குத் தெரிவிக்காமலும் அலட்சியமாக செயல்பட்டதாகவும் பயணிகள் குமுறினர்.இந்த நிலையில் நேற்று மீண்டும் அதே இடத்தில் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த ரயில் நேற்று மாலை 5.30 மணிக்குக் கிளம்புவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்து சென்டிரலுக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது நேற்று முன்தினம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட அதே இடத்தில் ஜெய்ப்பூர் ரயிலும் தடம் புரண்டது. 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி நின்றன.
மேலும் அந்த இடத்தில் சரி செய்யப்பட்டிருந்த மின் கம்பமும் விழுந்தது. இதனால் சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய பல ரயில்கள் கிளம்ப முடியாமல் நிறுத்தப்பட்டன.
மொத்தம் 8 ரயில்கள் காலதாமதமாக கிளம்பிச் சென்றன. மேலும் நீலகிரி எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் காவிரி எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும், இன்று காலை கிளம்ப வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
மேலும் சென்டிரலுக்கு நேற்று மாலை 6 மணிக்கு வர வேண்டிய பல ரயில்களும் வரவில்லை. ரயில்களின் இந்த மாற்றம் குறித்து முதலில் பயணிகளுக்கு சரிவர தெரிவிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
ரத்து செய்யப்பட்ட ரயில்களில் செல்லக் காத்திருந்த பயணிகள் நீண்ட நேரத்திற்குப் பிறகே அதுகுறித்துத் தெரிய வந்து டிக்கெட்டை ரத்து செய்து விட்டு கோபத்துடன் கிளம்பிச் சென்றனர்.
ரயில்வே அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தால், சென்டிரல் ரயில் நிலையத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த குழப்பமான சூழ்நிலை பயணிகளை கடும் அவதிக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications