தமிழகத்தில் உயர் கல்வி படுமோசம் -விஜயகாந்த்
சென்னை:தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வறுமையை ஒழிக்க வேண்டுமெனில் கல்வியையும், வேலை வாய்ப்பையும் கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.
ஆனால் தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் நிலவும் அவலங்கள் சொல்லி மாளாது. கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களை மட்டும் நியமிக்க வேண்டும், கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசு அந்த நியமனங்களையெல்லாம் முற்றிலும் நிறுத்தியே விட்டது.
அரசு கலைக் கல்லூரிகளில் இருந்து வந்த சில சுயநிதி படிப்புகளுக்கு எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஷிப்ட் முறையை கொண்டு வந்துள்ளனர்.
ஷிப்ட் முறை எப்படி செயல்படுத்துவது என்பதை பற்றி வழிமுறை வகுக்கப்படாததால், இந்த கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களை இரண்டாக பிரித்து காலையிலும், மாலையிலும் படிக்கச் செய்துள்ளனர்.
ஷிப்ட் முறையில் போதிய மாணவர்கள் சேராததால், அந்த வகுப்புகளும் மாணவர்களும் திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளனர்.
இதனால் எந்த நோக்கத்திற்கு ஷிப்ட் முறை கொண்டுவரப்பட்டதோ அதற்கான திட்டமே நிறைவேறாமல் போய்விட்டது. இதனால் பாதிக்கப்பட்டது ஏழை மாணவர்கள்தான்.
மேலும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து சீரழிந்து வருகிறது என்பது தான் உண்மை.
உயர் படிப்பாளர்கள் அரசியலில் தலையிட்டால் அரசியல் செழுமைப்படும். ஆனால் அதைவிட்டு தலைகீழாக அரசியல்வாதிகள் உயர்படிப்பில் தலையிட்டால் என்னவாகும் தெரியுமா. ஊழலுக்குக்கும், உதவாக்கரைகும் தான் வழி வகுக்கும் என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications