ராமேஸ்வரம்-மானாமதுரை அகல ரயில்பாதை: சோனியா நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
சென்னை:ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை ஆகஸ்ட் 12ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
இது குறித்து ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறுகையில்,
ஆகஸ்ட் 12ம் தேதி ராமேஸ்வரத்தில் மாலை 4 மணிக்கு திறப்பு விழா நடைபெறும். திறப்பு விழாவில் ராமேஸ்வரம்- சென்னை சிறப்பு பயணிகள் ரயிலை சோனியா காந்தி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார்.
நிழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்கிறார். முதலில் சோனியா காந்தியும், லாலுவும் மதுரைக்கு வருகிறார்கள்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அவர்கள் வருவார்கள்.
முதல்வர் கருணாநிதி, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் என்றார் வேலு.
பாம்பன்-மண்டபம் அகல ரயில் பாதை:
இந்த ரயில் பாதையின் முக்கிய அம்சம், பாம்பன்-மண்டபம் இடையே கடலில் அமைந்துள்ள மீட்டர்கேஜ் பாதையும் அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதுதான். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பாம்பன் கடல் பாலம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ரயில்வே வரலாற்றில் முக்கிய சம்பவமாகும்.
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தைதப் பயன்படுத்தி இந்த அகலப் பாதை மாற்றப் பணிகள் நடந்துள்ளன. சென்னையில் உள்ள ஐஐடி மற்றும் அமைப்புப் பொறியியல் ஆய்வு மையம் ஆகியவை இந்தப் பணியில் பெரும் பங்காற்றியுள்ளன.
புதிய ரயில் பாதை தொடங்கப்பட்டவுடன், சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு மதுரை வழியாக தினசரி மாலை 5 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மறு நாள் காலை 5.15 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்திலிருந்து இரவு 10.30 மணிக்குக் கிளம்பி அடுத்த நாள் காலை 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இதேபோல மதுரை - ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் தினசரி காலை 6.30க்குக் கிளம்பி 10.30 மணிக்கு ராமேஸ்வரத்தை அடையும். மறு மார்க்கத்தில் மாலை 6 மணிக்குக் கிளம்பி இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும் என்றார்.