கோவை குண்டுவெடிப்பு: மேலும் 5 பேர்குற்றவாளிகள்-2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!!
கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 5 பேர் குற்றவாளிகள் என தனி நீதிமன்ற நீதிபதி உத்திராபதி இன்று அறிவித்தார்.
மேலும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 84 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி அவர்களில் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.
மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் மீது வரும் 8, 9 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
1998ம் ஆண்டு கோவையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 58 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 166 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு கடந்த 1ம் தேதி தனி நீதிமன்ற நீதிபதி உத்திராபதி தீர்ப்பு வழங்கினார். அன்றைய தினம் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.
கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 5 பேர் மீதான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று முதல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை நீதிமன்றம் கூடியவுடன் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பேர் மீதான தனது உத்தரவை நீதிபதி வெளியிட்டார்.
அதன்படி சர்புதீன், சிக்கந்தர், மீர் சாபிர் அகமத், அய்யப்பன், உபைதூர் ரஹ்மான் ஆகிய ஐந்து பேரும் குற்றவாளிகள் என அவர் அறிவித்தார். அதே நேரத்தில் குண்டிவெடிப்பை இவர்கள் திட்டமிடவில்லை என்பதால் இவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
இதையடுத்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள 84 பேரின் மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி தொடங்கினார். அப்போது இந்த 84 பேரில் பிற வழக்குகள் எதிலும் சம்பந்தப்படாதவர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர்களது வக்கீல்களின் வாதங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வரும் 8,9 மற்றும் 13ம் தேதிகளில் வழங்கப்படும் என அறிவித்தார்.
முன்னதாக குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், கோவை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகள், வணிக பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் சில அமைப்புகளையும், ஜாமீனில் உள்ள தீவிரவாதிகளையும் உளவு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் இம்மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம், பொட்டல்புதூர், கடையநல்லூர், தென்காசி, வடகரை, செங்கோட்டை ஆகிய ஊர்களில் சாதாரண உடைகளில் பல பகுதிகளில் உள்ள போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல ஊர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தென்காசி-புளியரை சோதனை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையும் நடைபெறுகிறது. பல ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள் குவியும் குற்றாலத்திலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்












Click it and Unblock the Notifications