சங்கரராமன் கொலை வழக்கு- வழக்கை வேறுநீதிபதியிடம் மாற்ற தி.க கோரிக்கை
சென்னை:காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீதான வழக்கை விரைவாக நடத்தக் கோரி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இன்னும் விசாரணையே ஆரம்பிக்கவில்லை.
இந் நிலையில், சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்று கோரி தமிழகம் மற்றும் புதுவையில், திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வீரமணி பேசுகையில்,
காஞ்சி சங்கர மட ஊழியர்களின் ஊழல்கள் குறித்து சங்கரராமன் புகார் அனுப்பியதால் அவரைக் கோவிலுக்குள்ளேயே வைத்து கொன்றனர்.
இந்தத் கொலையைத் திட்டமிட்டு நடத்த நடந்த சதியின் பின்னணியில் ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் இருந்துள்ளனர்.
இந்த வழக்கில் இன்னும் எதுவும் நடைபெறாமல் உள்ளது. சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதாக காரணம் கூறப்படுகிறது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு ஜெயேந்திரர் வந்தபோது, வக்கீல்களுக்கு அருகே அமர இருக்கை போடுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த நீதிபதிபை நம்ப முடியாது.
எனவே அந்த நீதிபதியிடமிருந்து வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
எங்களுக்கும், சங்கராச்சாரியார்களுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. இடைக்காலத் தடையை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் டெல்லி வரை சென்று போராடுவோம்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications