கோவை: இன்று 7 பேருக்கு ஜாமீன்-வெடிபொருட்களுடன் 2 வாகனங்கள் ஊடுறுவல்?
கோவை:கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 158 பேரில் இன்று 7 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே கோவை நகருக்குள் 2 வாகனங்களில் வெடிபொருட்களுடன் சிலர் ஊடுறுவியிருப்பதாக வந்த தகவலால் அங்கு பீதி நிலவுகிறது.
1998ம் ஆண்டு கோவையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 166 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா உள்ளிட்ட 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த 158 பேரில் 89 பேர் மீது கூட்டு சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம் என நீதிபதி அறிவித்தார்.
ஆனால், முக்கிய குற்றச்சாட்டான கூட்டு சதி செய்தல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 16 பேரையும் சேர்த்து மொத்தம் 105 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் ஒவ்வொன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது சிலரது ஜாமீன் மனுக்களுக்கு அரசு வழக்கறிஞர் பாலசுந்தரம் ஆட்சேபணை தெரிவித்தார். மேலும் சில மனுக்கள் மீது ஆட்சேபம் உள்ளதா இல்லையா என்பதை தெரிவிக்க கால அவகாசம் கேட்டார்.
இதையடுத்து அவருக்கு வரும் 13ம் தேதி வரை நீதிபதி கால அவகாசம் வழங்கினார்.
ஜாமீன் கோரியவர்களில் சதீஷன், அப்துல் ரஹ்மான் ஆகிய 2 பேரின் மனுக்கள் மீது அரசுத் தரப்பால் விளக்கம் தரப்பட்ட பின் நேற்று நீதிபதி உத்தராபதி தீர்ப்பு வழங்கினார். இருவருக்கும் ஜாமீன் வழங்கினார்.
அதே போல இன்று காதர், சபீர் அகமது, அப்துல் சலீம், சிக்கந்தர் உள்ளிட்ட 7 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
வெடிபொருட்களுடன் வாகனங்கள் ஊடுறுவல்?:
இதற்கிடையே, கோவை நகருக்குள் வெடிபொருட்களுடன் 2 வாகனங்கள் ஊடுறுவியிருப்பதாக உளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை நகரில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.
நகர எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் வழியாக கோவை நகருக்குள் நுழையும் வாகனங்களை போலீஸார் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications