வங்கிகளில் மோசடி- ரூ. 64 லட்சம் சுருட்டல்:பேயிங் கெஸ்ட் நடத்திய பெங்களூர் பெண் கைது
பெங்களூர்:10வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பெங்களூரைச் சேர்ந்த பெண், வங்கிகளை ஏமாற்றி பர்சனல் லோன் வாங்கியும், பிற பெண்களின் பெயர்களில் போலி கிரெடிட் கார்டுகள் வாங்கியும் ரூ. 64 லட்சம் பணத்தை மோசடி செய்து கைதாகியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்தவர் ஹேமலதா (27). 10வது வரை மட்டுமே படித்துள்ள இவர் பெண்களுக்கான பேயிங் கெஸ்ட் விடுதி நடத்தி வருகிறார்.
அங்கு தங்கும் பெண்களின் விவரங்களை சேகரித்து (பெரும்பாலும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுவோர்) அவர்களது பெயர்களில் ஆவணங்களை (அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் முதல் எச்.ஆர். லெட்டர் வரை) போலியாக தயாரித்து வங்கிகளில் பர்சனல் லோன் மற்றும் கிரடிட் கார்டுகளை வாங்கியுள்ளார்.
மேலும் போலியாக பேன் கார்டுகளை தயாரிக்க ஒரு இயந்திரமே வைத்துள்ளாராம்.
ஹேமலதாவுக்கு துணையாக சுரேஷ் என்ற வாலிபரும் இருந்துள்ளார்.
சிட்டி வங்கி உள்பட பல முன்னணி வங்கிகளில் இதுவரை ரூ.64 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளனர்.
இந் நிலையில் இப்போது ஹேமலதா போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.
அவரிடமிருந்து கிரடிட் கார்டுகள், பேன் கார்டுகள், அப்பாயிண்ட்மென்ட் லெட்டர்கள், அடையாள அட்டைகள், போலி வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஹேமலதாவின் கூட்டாளி சுரேஷ் தலைமைறவாகி விட்டார். அவரைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications