இரு பைக்குகள் மோதி 3 பேர் பலி
விழுப்புரம்:விழுப்புரம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
விழுப்பும் மாவட்டம் வானூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் முரளி (24). இவரது நண்பர் சிவக்குமார் (22).
இருவரும் அங்குள்ள ஒரு கல்குவாரியில் ஜேசிபி டிரைவராக வேலை பார்த்து வந்தனர். நேற்று இருவரும் வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரி சென்று கொண்டிருந்தனர். அப்போது மயிலாடுதுறையைச் சேர்ந்த சந்திரன் மகன் செந்தில் முருகன்(27), கோதண்டராமன் மகன் ரவி (26) ஆகிய இருவரும் புதுவையில் இருந்து மயிலாடுதுறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
இரவு 11-15 மணியளவில் இரண்டு வண்டிகளும் கரசானூர் என்ற இடத்தில் வந்தபோது, நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் 4 பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.இதில் பலத்த காயமடைந்த செந்தில் முருகன், முரளி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் சிவக்குமார், ரவி இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் சிவக்குமார் இறந்து போனார். ரவியும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து வானுர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.