ரெளடிகளை லூஸில் விட்ட எஸ்.ஐ. சஸ்பெண்ட்
சென்னை:குடிபோதையில் இரு ரெளடிகள் பொதுமக்களிடம் கலாட்டா செய்வதாக வந்த தகவலை கண்டுகொள்ளாமல் விட்ட சப் இன்ஸ்பெக்டரும், தலைமைக் காவலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அடையாறு மேம்பாலத்தில் நேற்று பிற்பகல் 2 ரெளடிகள் குடித்து விட்டு அப்பகுதியில் கலாட்டா செய்து கொண்டிருந்தனர். பெண்களிடமும் அத்து மீறினர்.
இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பொது மக்கள் போன் செய்து தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் முருகனைத் தொடர்பு கொண்ட கட்டுப்பாட்டு அறை போலீஸார், உடனடியாக சென்று ரெளடிகளை பிடிக்குமாறு உத்தரவிட்டனர்.
ஆனால் அந்த உத்தரவை முருகன் கண்டுகொள்ளவில்லை. காரணம், ரோந்து என்ற பெயரில் அவர் கடை கடையாக மாமூல் வசூல் செய்யும் வேலையில் பிஸியாக இருந்தார்.
இதே போல ஏட்டு சந்தான கிருஷ்ணனுக்கும் ரெளடிகள் தொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு அறை தகவல் தந்தது.
ஆனால், அவர் காவல் நிலையத்தில் மாமூல் வேலைகளில் தீவிரமாக இருந்தார்.
இதனால் ரெளடிகள் இருவரும் தங்களது மனம் போன போக்கில் ரகளை செய்து டயர்ட் ஆகி அவர்களாகவே அங்கிருந்து போய் விட்டனர்.
இந் நிலையில் கட்டுப்பாட்டு அறை போலீசார் எஸ்.ஐ மற்றும் தலைமைக் காவலர்களின் செயல்பாட்டை கண்காணித்து அவர்களது அலட்சியப் போக்கை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் கமிஷ்னர் நாஞ்சில் குமரன்.












Click it and Unblock the Notifications