காவிரியில் பெரும் வெள்ளம்-நீரில் மூழ்கிய கிராமங்கள்
திருச்சி:காவிரியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அரியலூர் அருகே 2 கிராமங்களில் நீர் புகுந்துவிட்டது.
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 8 மாவட்டங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து அபரிமிதமான தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதையடுத்து அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 44 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 122.61 அடியாக உள்ளது.
இதனால் நாமக்கல், ஈரோடு மாவட்டங்ளில் ஆற்றங்கரையோரம் கிராமங்களை தண்ணீர் முழுமையாக சூழ்ந்துள்ளது.
இதையடுத்து இரு மாவட்டங்களிலும் கரையோரம் வசிக்கும் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், திருமானூர் அருகே இரண்டு கிராமங்கள் நீரில் மூழ்கிவிட்டன.
இங்கு வசித்து வருவோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அங்கு நடந்து வந்த கூட்டுக் குடிநீர்த் திட்டக் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன. கட்டப்பட்டிருந்த பாலமும் இடிந்து போய் விட்டது.
தொடர்ந்து காவிரியில் பெரும் வெள்ளப் பெருக்கு நிலவுவதால், சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் அதிகாரிகள் 24 மணி நேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கரையோரம் வசிக்கும் பகுதிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். எத்தகைய நிலையையும் சமாளிக்கும் வகையில் இந்த மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
திருமண மண்டபங்கள், பள்ளிக் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications