பிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தந்தால்என்ன தவறு?: உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி
டெல்லி:நாட்டில் 52 சதவீதம் வசிக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன, அதில் என்ன தவறு இருக்கிறது என அதிரடியாய் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், தாக்கர், ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை நேற்றும் நடந்தது. அப்போது பிற்படுத்தப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை குறித்த சென்சஸ் விவரங்கள் கூட அரசிடம் இல்லை என இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் ஒருவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடினார்.
அப்போது இடைமறித்த நீதிபதி ரவீந்திரன், அப்படிப்பட்ட சென்சஸ் எதற்கு. பிரச்சனை கணக்கில் இல்லை. உங்களிடம் தான் உள்ளது. இப்படிப்பட்ட கணக்கெடுப்பு நடந்து முடியும் வரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்கிறீர்களா. இதற்காக வருடக்கணக்கில் அரசு காத்திருக்க வேண்டுமா. இடைக்கால நிவாரணமாக 27 சதவீத இட ஒதுக்கீட்டை தருவதில் என்ன தவறு என்றார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், நீங்கள் அமெரிக்காவை உதாரணம் காட்டுகிறீர்கள். அங்கே 80 சதவீதத்தினர் வெள்ளையர்கள். 20 சதவீதத்தினர் தான் கருப்பர்களும் பிற இனத்தினரும். இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழ். இங்கே பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட 20 சதவீதத்தினர் தான் நாட்டின் எல்லா பலன்களையும் அனுபவித்து வருகின்றனர்.
இப்போது மற்ற 80 சதவீதத்தினரும் பலன்களை அனுபவிக்கட்டுமே.. அதை அனுமதிப்பதில் என்ன தவறு. நாட்டில் பல மாநிலங்களில் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு அமலில் இருக்கத்தானே செய்கிறது. இதை மத்திய அரசும் அமலாக்கினால் என்ன தவறு என்றார்.
அப்போது பேசிய வழக்கறிஞர் சால்வே, யார் யாருக்கு இந்த இட ஒதுக்கீடு என்ற அறிவியல்பூர்வமான விவரம் கூட இல்லை என்றார்.
அப்போது இடைமறித்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தந்த சாதிகளின் பட்டியலின் அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு அமலாக்கப்படவுள்ளது என்றார்.
மாநில அரசுகள் உருவாக்கிய பட்டியலை வைத்து இட ஒதுக்கீடு தருவது அர்த்தமில்லாதது என வழக்கறிஞர் சால்வே கூற, அவருக்கு பதிலளித்த நீதிபதி ரவீந்திரன், நாளை இந்த அரசு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தால் அனைத்து ஏழைகள் குறித்த கணக்கெடுப்பும் முடியும் வரை இட ஒதுக்கீடே கூடாது என்பீர்களா, எத்தனை சதவீத ஏழை மக்கள் உள்ளனர் என்ற விவரம் இருக்கும்போது அது தொடர்பான அறிவியல்பூர்வமான பட்டியலுக்கு அவசியம் என்ன வந்தது என்றார்.
இன்றும் இந்த வழக்கில் விவாதங்கள் தொடர உள்ளன.












Click it and Unblock the Notifications