கபாலீஸ்வரர் கோவில் கோபுரத்தை இடிதாக்கியது: சுதைகள் சேதம், 3 பேர் காயம்
சென்னை:சென்னை கபாலீஸ்வரர் கோவில் ராஜ கோபுரத்தை இடி தாக்கியது. இதனால் பக்தர்கள் பீதியடைந்து கோவில் முன்பு பெரும் திரளாக கூடி விட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ளது கபாலீஸ்வரர் கோவில். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான கபாலீஸ்வரர் கோவில் வெகு பிரபலமானதாகும். இந்தக் கோவிலில் 140 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. 9 அடுக்குகளைக் கொண்டது இக்கோவில்.
நேற்று மாலை சென்னை நகர் முழுவதும் திடீரென கன மழை பெய்தது. பலத்த இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையால் நகரமே ஸ்தம்பித்தது. இந்த நிலையில், மாலை 6 மணியளவில் பலத்த இடி ஒன்று கோவில் ராஜகோபுரத்தைத் தாக்கியது.
இதில் ராஜகோபுரத்தில் உள்ள யாழி அமைப்பின் ஒரு பகுதி சேதமடைந்தது. உடைந்த யாழியும், 2 சுதைகளும் (பொம்மைகள்) மேலிருந்து கீழே விழுந்தன. உடைந்த பகுதிகள் கீழ் நோக்கி விழுந்ததில் கோபுரத்தில் இருந்த சிங்கம், லட்சுமி, முருகன் ஆகிய சிலைகளும் சேதமடைந்தன.
இடிபாடுகள் கீழே விழுந்ததில், கோபுரத்திற்குக் கீழே நின்று கொண்டிருந்த கோவில் ஊழியர் பாரி, ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் லேசான காயமடைந்தனர்.
ராஜகோபுரம் மீது இடி விழுந்து சுதைகளும், யாழி அமைப்பின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்த செய்தி அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் கோவில் முன்பு கூடி விட்டனர்.
இந்தத் தகவல் முதல்வர் கருணாநிதிக்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. ராஜகோபுரத்தின் மீது இடி விழுந்தது மோசமான நிகழ்வுக்கு முன்னோட்டமாகும் என்று சில பக்தர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்த நிலையில், ராஜகோபுரம் மீது இடி தாக்கியதைத் தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள், பரிகார பூஜைகளை நடத்தினர். அதன் பின்னர் கோவில் நடை சாத்தப்படும் வரை வழக்கமான பூஜைகள் நடந்தன.
இடி தாக்கியதால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க பலாலயம் என்ற சிறப்புப் பூஜையை இன்னும் சில நாட்களில் கோவில் அர்ச்சகர்கள் நடத்தவுள்ளனர்.
இடி தாக்கிய ராஜகோபுரத்தை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், கோவில் செயல் அதிகாரகி தேவேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தேவேந்திரன் சேதம் குறித்துக் கூறுகையில், சேதத்தின் அளவு சிறிதாகவே உள்ளது. கோவில் கோபுரத்தில் மின்னல், இடியைத் தாங்கும் கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
இன்று சிற்பிகள் வந்து சேதமடைந்த பகுதியைப் பார்வையிட்டு என்ன மாதிரியான மராமத்து செய்ய வேண்டும் என்பது குறித்து சொல்வார்கள். அதன் பின்னர் உடனடியாக சேதமடைந்த பகுதி சரி செய்யப்படும் என்றார்.
தமிழகத்தில் உள்ள பிரபலமான கோவிலின் ராஜகோபுரம் பாதிக்கப்படுவது கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். 15 நாட்களுக்கு முன்பு கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் கலசம் ஒன்று இடிந்து விழுந்தது நினைவிருக்கலாம்.
இந்த நிகழ்வுகள் காரணமாக பக்தர்கள் பெரும் பீதியும், கவலையும் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications