சினிமா பார்த்து விட்டு திரும்பியவர்களைதிருடர்கள் என நினைத்து வெளுத்த மக்கள்!
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே செகன்ட் ஷோ பார்த்து விட்டு திரும்பிய 3 பேரை, திருடர்கள் என நினைத்து ஊர் மக்கள் அடித்து துவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரியபாளையம் பகுதியில், அடிக்கடி விவசாய பம்பு செட் உள்ளிட்டவை திருடு போய் வந்தன. இதனால் கிராம மக்கள் பெரும் கொதிப்படைந்தனர். திருடர்களை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ஊர் மக்கள் சேர்ந்து இரவு ரோந்துக்குக் குழுவை அமைத்தனர்.
அதன்படி ரோந்துக் குழுவினர் ஊரில் தீவிரக் கண்காணிப்பில் இருந்தனர்.அப்போது பெரியபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சின்னராசு, அய்யப்பன், சூரி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு நாய் அவர்களைத் துரத்தியது. இதனால் கடுப்பான மூன்று பேரும் வண்டியை நிறுத்தி விட்டு அந்த நாயை சுற்றிச் சூழ்ந்து அடித்தனர். இதில் அந்த நாய் மயக்கமடைந்தது.
இதைப் பார்த்த ஊர் மக்கள் அவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என நினைத்து வளைத்துப் பிடித்து சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். ஊர் மக்கள் ஒன்று கூடி அடித்ததால் மூன்று பேரும் வலி தாங்க முடியாமல் திணறினர்.
பின்னர் மூன்று பேரையும் மாட்டு வண்டியில் கட்டி வைத்து விட்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து விசாரித்தபோதுதான் 3 பேரும் அப்பாவிகள் என்பது தெரிய வந்தது.
இந்தத் தகவல் தெரிந்ததும் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் மூன்று பேரையும் அப்பாவிகள் என்று கூறி அம்பேத்கர் நகர் மக்களிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
இந்தத் தாக்குதலில் சின்னராசுவுக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் அவருக்கு வலிப்பும் வந்து விட்டது. இதையடுத்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரைத் தாக்கிய 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications