திமுக-பாமக ரயில் பாலிடிக்ஸ்!
சேலம்:கேரளாவைக் கண்டித்து வருகிற 25ம் தேதி முதல் நடத்தப்படவுள்ள கேரள ரயில் மறியல் போராட்டம், விடிய விடிய நடத்தப்படும் என வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 14ம் தேதி சேலம் ரயில் கோட்டம் தொடங்கப்படும், அதை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார் என்று ரயில்வே இணை அமைச்சர் வேலு அறிவித்துள்ளார். ஆனால் கேரள தரப்பில் டெல்லியில் பயங்கரமான லாபி நடந்து வருகிறது.
எப்பாடுபட்டாவது சேலம் கோட்டத் தொடக்க விழாவை நடத்த விடாமல் தடுக்க கேரள அரசும், அம்மாநில எம்.பிக்களும் முழு மூச்சாக இறங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தை முடக்க முயன்றனர்.
கேரளாவின் லாபியைத் தொடர்ந்து இரு மாநில முதல்வர்களுடன் பேசிய பிறகே சேலம் கோட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.
இது தமிழகத் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லாலுவுக்கும், வேலுவுக்கும் இடையே இதுதொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், வேளாண்துறை அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம், சேலம் கோட்ட விவகாரம் தொடர்பாக நேரடியாக களம் இறங்கியுள்ளார் (அல்லது இறக்கி விடப்பட்டுள்ளார்).
நேற்று திருச்சியில் செய்திாயளர்களிடம் பேசிய வீரபாண்டி ஆறுமுகம், திட்டமிட்டபடி செப்டம்பர் 14ம் தேதி சேலம் கோட்டம் தொடங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 25ம் தேதி முதல் சேலம் வழியாக கேரளாவுக்கு செல்லும் அல்லது கேரளாவிலிருந்து சேலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களையும் மறித்துப் ேபாராட்டம் நடத்தப்படும்.
வருகிற 25ம் தேதி முதல் இந்தப் போராட்டம் தொடங்குகிறது. கேரளாவைச் சேர்ந்த ஒரு ரயிலையும் சேலம் வழியாக இயக்க அனுமதிக்க மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வீரபாண்டியார். அப்போது ஏற்கனவே திட்டமிட்டபடி 25ம் தேதி முதல் போராட்டம் நடைபெறும். பகலில் மட்டுமல்லாது இரவிலும் மறியல் போராட்டம் முழு வீச்சில் நடைபெறும்.
சேலம் வழியாக கேரளாவுக்கும், கேரளாவிலிருந்து சேலம் வழியாகவும் ஒரு ரயிலையும் இயக்க விட மாட்டோம். அது டெல்லி செல்லும் ரயிலாக இருந்தாலும் சரி, வேறு எங்கு செல்லும் ரயிலாக இருந்தாலும் சரி, கேரளாவைச் சேர்ந்த ஒரு ரயிலையும் ஓட விட மாட்டோம்.
சேலத்தில் மட்டுமல்லாது கோவை, திருச்சி உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்தப் போராட்டம் முழு வீச்சில் நடைபெறும். போராட்டம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை சேலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
சேலம் ரயில் கோட்டம் தமிழகத்தின் உரிமை. அதை அடையும் வரை விட மாட்டோம் என்றார் அவர். இதேபோல கோவையிலும் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமதாஸுக்கு எதிராக வீரபாண்டியார்?
வீரபாண்டி ஆறுமுகத்தின் இந்தப் போராட்ட அறிவிப்புக்குப் பின்னால், திமுக - பாமக மோதல் உள்ளதாக வலுவாக நம்பப்படுகிறது.
திமுக அரசை எதிர்த்து பாமக கடுமையான நிலையை சமீப காலமாக எடுத்து வருகிறது. திமுக அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் கடுமையாக எதிர்க்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பாமகவின் இந்த நிலையால் முதல்வர் கருணாநிதி கடும் அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில் சேலம் கோட்ட விவகாரத்தில் பாமகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்தப் பிரச்சினையை வீரபாண்டியார் மூலம் முதல்வர் கருணாநிதி எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
காரணம் ரயில்வே இணை அமைச்சராக இருப்பவர் பாமகவைச் ேசர்ந்த ஆர்.வேலு. எனவே சேலம் கோட்ட விவகாரத்தில் கொடுக்கப்படும் நெருக்கடி ரயில்வேயை மட்டுமல்லாது ராமதாஸுக்கும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் என்பது திமுகவின் கணிப்பாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications