திமுகவில் இணைந்த கோமதி முத்துராணி துரைச்சி!
வாசுதேவநல்லூர்:சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவரான வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் கோமதி முத்துராணி துரைச்சி நடராஜன் நடத்தி வந்த அறக்கட்டளையில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் கிராமத்தில் மன்னர் புலித் தேவன் மாளிகை உள்ளது. இங்கு அவரது வாரிசுகள் வசித்து வருகின்றனர்.
வருடந்தோறும் இங்கு மன்னர் புலித் தேவன் பிறந்த நாள் விழாவை "புலித்தேவர் அறக்கட்டளை" என்ற அமைப்பை நடத்தி வரும் சசிகலாவின் கணவர் நடராஜன் விமரிசையாகக் கொண்டாடுவார்.
இந்த அறக்கட்டளையின் பொருளாளராக நெற்கட்டும்செவல் ஜமீன் குடும்பத்தின் வாரிசு உள்ளமுடையார் துரையின் மகள் கோமதி முத்து நாச்சியார் என்ற ராணி துரைச்சி இருந்து வருகிறார். இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.
பின்னர் திமுகவின் ஆதரவோடு யூனியன் சேர்மன் ஆனார். இப்போது திமுகவில் இணைந்துள்ளார்.
மன்னன் புலித்தேவன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரியுள்ள இவர் நடராஜன் நடத்தி வரும் புலித் தேவர் அறக்கட்டளையின் பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
மன்னன் புலித்தேவன் பிறந்த நாள் தினம் நெருங்கி உள்ள நிலையில் அவரது வாரிசு அந்த அமைப்பிலிருந்து விலகியது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நான் கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றினேன். தற்போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று வாசுதேவநல்லூர் யூனியன் தலைவராக பணியாற்றி வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக பூலித் தேவரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வந்தேன்.
நான் திமுக மாவட்ட பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளேன். எனவே பூலித்தேவர் பிறந்த நாள் அறக்கட்டளை பொருளாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இதுவரை அவரின் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த ஆண்டு பூலித் தேவரின் பிறந்த நாளை அரசு விழாவாக ஏற்று நடத்த முயற்சிகள் நடந்து வருகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications