10ம் வகுப்பு வரை கட்டாய தமிழ்:தமிழக அரசின் சட்டம் செல்லும்!
சென்னை:முதல் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்ற தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிக் கூடங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயம் ஒரு பாடமாக போதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு தமிழ் உணர்வாளர்கள், தமிழறிஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த சட்டத்தை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மலையாள சமாஜம், நாயர் சேவைக் கழகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு இந்த சட்டத்தை உள்நோக்கத்துடன் கொண்டு வந்துள்ளது. இச்சட்டம் மொழியால் சிறுபான்மையினரின் உரிமைக்கு எதிராக உள்ளது. அரசியல் சட்டம் 29 மற்றும் 30வது பிரிவுக்கு முரணாக உள்ளது.
இந்த சட்டம் சிறுபான்மையினர் தங்களது தாய்மொழியைக் கற்க மறுக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் மனுக்கள் அனைத்தையும் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில், அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மறுக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. 1-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் படாமாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 1ம் வகுப்பில் ஒரு மாணவனுக்கு தமிழைக் கற்றுத் தரும்போது அது சுமையாக இருக்காது, மாறாக எளிதாகத்தான் இருக்கும்.
குழந்தைளின் ஆளுமைத் திறனை குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கும் கடமை அரசுக்கு உள்ளது. இந்த சட்டத்தை நியாயமற்றது என்று கூறுவதை ஏற்க முடியாது.
தமிழகத்தில் தமிழ்தான் அன்றாட நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நடவடிக்கைகள் சுமூகமாக நடப்பதற்கும், அலுவல் தொடர்பு எல்லாமே தமிழ் மொழியில்தான் உள்ளன. எனவே தமிழ் மொழியை புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
கல்வி குறித்து சட்டசபைதான் முடிவெடுக்க வேண்டும். சட்டசபை மூலம் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.
சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழியை பயிற்று மொழியாக எடுக்க அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை, அதில் தலையிடவில்லை. ஆகவே தமிழை ஒரு பாடமாக எடுத்து கட்டாயம் படிக்க வேண்டும் என்றும், இதைப் படிப்படியாக நிறைவேற்றும் வகையிலும், தமிழக அரசு கொண்டு வந்த சட்டம், மொழியால் சிறுபான்மையினருக்கிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. எனவே இந்த சட்டம் செல்லும் என்று நீதிபதிகளின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications