பிரதமர், கருணாநிதி சுமூக முடிவு காண்பார்கள்: லாலு
வாரணாசி:சேலம் ரயில் கோட்டப் பிரச்சினை தொடர்பாக சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும் தெரிவித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
சேலம் ரயில் கோட்டம் தொடர்பாக இன்று தமிழகத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டம் மத்திய அரசை உலுக்கியுள்ளது. இதுவரை இந்தப் பிரச்சினையில் மெத்தனமாக இருந்து வந்த மத்திய அரசு தற்போது தமிழகத்தின் கொந்தளிப்பைப் பார்த்து சற்றே சுதாரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று உ.பி. மாநிலம் வாரணாசியில் நடந்த ராஷ்டிரிய ஜனதாதள் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட லாலு பிரசாத் யாதவிற்கு, ரயில் மறியல் போராட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கேரள ரயில்கள் தமிழகத்தில் மறிக்கப்பட்டது தொடர்பாக நான் பிரமதருடனும், முதல்வர் கருணாநிதியுடனும் பேசினேன்.
இந்தப் பிரச்சினைக்கு விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் என இருவரும் எனக்கு உறுதியளித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது எனவும் தெரிவித்தனர்.
இரு தரப்புக்கும் உடன்பாடான ஒரு தீர்வு விரைவில் எட்டப்படும் என்றும் இருவரும் என்னிடம் தெரிவித்தனர் என்றார் லாலு பிரசாத் யாதவ்.












Click it and Unblock the Notifications