வேலை தருவதாக கூறி 30 பேரிடம்ரூ. 30 லட்சம் பண மோசடி - ஒருவர் கைது
தூத்துக்குடி:வேலை தருவதாக கூறி தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் டேவிட். இவர் செயிண்ட் மேரிஸ் பவுண்டேசன் சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற அமைப்பை தொடங்கினார். பின்னர் அந்த டிரஸ்ட் சார்பில் கல்லூரி தொடங்கவிருப்பதாகவும், அதில் பணி புரிய வார்டன், துணை வார்டன் தேவை என்று பல நாளிதழ்களில் விளம்பரம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்டோர் அவரிடம் ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கட்டி பணிக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால் பணத்தை வாங்கியதோடு அவர்களை மறந்து விட்டார் டேவிட். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அனைவரும் தூத்துக்குடி போலீசில் புகார் செய்தனர். தலைமறைவாகி விட்ட டேவிட்டை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவரிடம் பணம் கொடுத்த ஏமாந்த சுந்தர பாண்டியன் மற்றும் கலைச் செல்வி ஆகியோர் டேவிட்டை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
டேவிட் ரூ. 30 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. அவரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.