மகளை தாக்கிய மருமகனை அடித்து கொன்ற மாமனார்
திருச்செங்கோடு:மகளைத் தாக்கிய மருமகனை தந்தையே அடித்துக் கொன்றார்.
திருச்செங்கோட்டையடுத்த கல்லாங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 33). இவருக்கும் பொன்னையன் என்பவரது மகள் ஈஸ்வரிக்கும் (27) பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சண்முகம் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து உதைப்பது வழக்கமாம்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பும் வழக்கம்போல் போதையில் ஈஸ்வரியை அடித்து உதைத்தார் சண்முகம். இதையடுத்து ஈஸ்வரி தனது தந்தை வீட்டுக்குச் சென்றார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த சண்முகம் நேற்று மாமனார் வீட்டுக்கு சென்று ஈஸ்வரியுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் ரகளையில் ஈடுபட்ட அவர் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசினார். மேலும் ஈஸ்வரியையும் அடித்து உதைத்தார்.
தனது மகளைப் போட்டு மருமகன் அடித்து உதைப்பதை பார்க்க பொறுக்காத தந்தை பொன்னையன், மருமகனை தடுத்தார். இதையடுத்து அவரையும் தாக்கினார் சண்முகம்.
ஆத்திரமடைந்த பொன்னையன் இரும்பு கம்பியால் சண்முககத்தை தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகத்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.












Click it and Unblock the Notifications