அணு சக்தி ஒப்பந்தம: பாஜக பலே பல்டி!
டெல்லி:அணு சக்தி ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் எதிர்த்து வந்த பாஜக இப்போது திடீர் பல்டி அடித்துள்ளது.
நாட்டு நலனுக்காக இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக பாஜக கூறியுள்ளது.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முதலில் பாஜக ஆதரிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அரசு விளக்க வேண்டும் என்று பாஜக கோரி வந்தது.
இந்த விஷயத்தில் இடதுசாரி உறுப்பினர்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் அது பிரச்சினை எழுப்பியும் வந்தது. இடதுசாரி உறுப்பினர்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தது பாஜக. ஆனால் இப்போது திடீரென பல்டி அடித்துள்ளது.
அணு சக்தி ஒப்பந்தத்தை நாட்டு நலனைக் கருதி ஆதரிப்பதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். அவர் கூறுகையில், நாட்டின் எதிர்கால நலன் கருதி ஒப்பந்தத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்காது.
அதேபோல் இந்தியா அணு ஆயுத சோதனை செய்ய அமெரிக்கா விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்கக்கூடாது என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
பாஜகவின் இந்த பலே பல்டிக்கு முக்கிய காரணமும் உள்ளது. அதாவது இந்தப் பிரச்சினை வெடித்த பின்னர் தேசிய அளவில் ஒரு வார இதழும் ஒரு முக்கிய தொலைக்காட்சி சேனலும் இரண்டு கருத்துக் கணிப்புகளை நடத்தின.
இந்த கருத்துக் கணிப்புகளில், இப்ேபாது நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்தப்பட்டால், இந்தப் பிரச்சினையை தொடர்ந்து தீவிரமாக வலியுறுத்தி வரும் இடதுசாரிக் கட்சிகளுக்கு பெரும் அடி விழும் என தெரியவந்துள்ளது.
மேலும் அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமரின் தனிப்பட்ட செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும், தேர்தல் உடனடியாக நடந்தால் தற்ேபாது உள்ள இடங்களை விட கூடுதல் இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கும் இடதுசாரிகளுக்கும் பலத்த அடி விழும் என்றும் தெரியவந்துள்ளது (தமிழகத்தில் திமுகவுக்கும் அடி விழும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன)
மேலும், படித்தவர்கள், நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு உள்ளதாகவும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது பழங்கதையாகிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
நகர்ப்புற வாக்காளர்களை பெரிதும் சார்ந்துள்ள பாஜகவுக்கு இந்த கருத்துக் கணிப்புகள் கண்ணைத் திறந்துள்ளன.
இதையடுத்தே திடீரென ஒப்பந்ததை ஆதரிப்பதாக பல்டி அடித்துள்ளது பாஜக.
இதுவரை அணு ஒப்பந்தம் குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்து வந்த யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜேட்லி, மல்ஹோத்ரா, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை கொஞ்ச நாள் சும்மா இருக்கும்படி அத்வானி அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
பாஜக தரப்பில் இருந்து தினந்தோறும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக யாராவது ஒருவர் பேட்டியளிப்பது வழக்கமாக இருந்து வந்தது. அந்தப் பேட்டிகள் எல்லாம் திடீரென நின்று போய்விட்டன.












Click it and Unblock the Notifications