கானாவின் குலவையும், கடுப்பான பெண்களும்!
தென்காசி:அரசியல்வாதிகளை, பெண்கள் கூட்டமாக வந்து குலவையிட்டு வரவேற்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் கூறினார். ஆனால் அவரை முற்றுகையிட்ட கிராமத்துப் பெண்கள் பல்வேறு புகார்களை சரமாரியாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி பாராளுமன்றத் தொகுதி கொட்டாகுளம் என்ற கிராமத்தில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், கருப்பசாமி பாண்டியன் பேசுகையில், பல கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரிகளும், ஊராட்சி தலைவர்களும் பாரபட்சமாக செயல்படுவதால் கலர் டிவி வழங்குவதில் குளறுபடி ஏற்படுகிறது.
இதுபோன்ற செயல்களை அவர்கள் ஒதுக்கி மக்களிடம் நற்பெயர் பெற வேண்டும்.
மேலும் இது போன்ற விழாக்களுக்கு வரும் எங்களைப் போன்றவர்களுக்கு பெண்கள் திரண்டு வந்து குலவையிட்டு வரவேற்க வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி உருவாகும். நாங்களும் உங்கள் கிராமத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்க வேண்டும் என்று எண்ணுவோம் என்றார்.
ஆனால் இதைப் பொருட்படுத்தாத கிராமத்துப் பெண்கள், எம்.எல்.ஏவை முற்றுகையிட்டு, எங்களது கிராமத்தில் சுகாதார வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, சாலை வசதி இல்லை. இதையெல்லாம் சரி செய்ய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டு முற்றுகையிட்டனர்.
பெண்களின் இந்தப் போராட்டத்தால் கருப்பசாமி பாண்டியனின் குலவைப் பேச்சு சத்தமில்லாமல் அமுங்கிப் போனது.












Click it and Unblock the Notifications