லோனுக்கு அலையும் மாணவர்கள்!:நிதியமைச்சர் சிதம்பரம் கவனிப்பாரா?
சென்னை:பிளஸ் டூவில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வங்கிகள் மறுப்பதாக மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.
அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்படும். அப்படி வழங்காத வங்கிகள் குறித்து புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
ஆனால் நடப்பதோ தலைகீழாக உள்ளது. பிளஸ்டூவில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவ, மாணவியருக்கு கல்விக் கடன் வழங்க வங்கிகள் மறுக்கிறதாம்.
இதுகுறித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி கூறுகையில், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பாக படிப்பார்கள் என்று உறுதியாக கூற முடியாது.
மேலும் இப்படிப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. எனவே அவர்களால் குறித்த காலத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது. எனவே ரிஸ்க் எடுக்க விரும்பாமல்தான் இப்படிப்பட்ட மாணவ, மாணவியருக்கு கடன் தருவதில் நாங்கள் தயக்கம் காட்டுகிறோம் என்றார்.
வங்கிகளின் இந்த போக்கால், குறைந்த மதிப்பெண் எடுத்து பொறியியல் படிப்புகளில் சேரக் காத்துள்ள மாணவ, மாணவியர்கள் பெரும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கவுன்சிலிங் நடந்தபோது, மாணவ, மாணவியர்களுக்கு கடன் வழங்க வங்கிகளிடையே கடும் போட்டி நிலவியது. அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றருந்ததே காரணம்.
இவர்களுக்கு எப்படியும் பெரிய பெரிய நிறுவனங்களில் பெரும் சம்பளத்துடன் வேலை கிடைத்து விடும் என்பதாலும், கடனை குறித்த காலத்திற்கு முன்பே வசூலித்து விட முடியும் என்ற நம்பிக்கையாலும், இவர்களுக்கு கடன் தர வங்கிகள் சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருந்தன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்காக போடப்பட்டிருந்த வங்கிகளுக்கான ஸ்டால்களிலும் மாணவர்கள் கூட்டம் அலை மோதியது. ஆனால 2வது கட்ட கவுன்சிலிங் முடிந்தவுடனேயே பல வங்கிகள் தங்களது கடைகளை காலி செய்து விட்டு கிளம்பிச் சென்று விட்டன.
3 நாட்களுக்கு முன்பு ஒரு வங்கியின் பிரதிநிதிகளையும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காண முடியவில்லை. அத்தனை பேரும் கிளம்பிப் போய் விட்டார்கள். கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள் நேரடியாக வங்கிகளை அணுகலாம் என விளக்கம் கொடுக்கப்பட்டது.
தற்போது குறைந்த மதிப்பெண்களை வாங்கியுள்ள மாணவ, மாணவியர்களை ஏதோ வேண்டாத விருந்தாளிகள் போல முகச் சுளிப்புடன் வங்கிகள் பார்க்கின்றனவாம்.
எங்களது எதிர்காலத்தை எப்படி இந்த வங்கிகள் நிர்ணயிக்க முடியும். பிளஸ்டூ தேர்வு எழுதிய எல்லோருக்குமே அதிக மதிப்பெண்கள் கிடைப்பது சாத்தியமா. வங்கிகள் ஏன் இப்படி எங்களது வாழ்க்கையில் விளையாடுகின்றன என்று மாணவ, மாணவியர்கள் புலம்புகின்றனர்.
படிக்க வாய்ப்பு கிடைத்தும், கடன் கிடைக்காமல், கல்விப் பசியில் துடித்துக் கொண்டிருக்கும் இந்த அப்பாவி மாணவ, மாணவியரின் ஓலம், ப.சிதம்பரம் காதுகளுக்கு எட்டுமா?












Click it and Unblock the Notifications