லாரி டிரைவர்கள் திருடி புதைத்த ரூ.29 லட்சம்:ஆடு மேய்க்கும் சிறுவர்கள் குஜால்
வேலூர்:பால் கம்பெனிக்கு கொடுத்தனுப்பிய பணத்தை புதருக்குள் மறைத்து வைத்து விட்டு, திருடு போனதாக சொல்லி நாடகமாடிய லாரி டிரைவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
![]() |
சென்னையை அடுத்துள்ள சோழவரத்தில் கிரீம் லைன் என்ற தனியார் பால் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த கிளைகளுக்கு தேவையான பணத்தை பால் கொண்டு போகும் டேங்கர் லாரி டிரைவர்கள் மூலம் கொடுத்தனுப்புவது வழக்கமாம்.
இந் நிலையில் கடந்த 20ம் தேதி தர்மபுரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள கிளை நிறுவன மேலாளரிடம் கொடுக்கும்படி ரூ.29 லட்சம் பணத்தை டேங்கர் லாரி டிரைவரான சம்பத்திடம் (32) கொடுத்துள்ளனர்.
லாரியில் உள்ள லாக்கரில் பணத்தை வைத்துக் கொண்டு சென்றார் சம்பத்.
அவரைத் தொடர்ந்து இன்னொரு லாரியில் நல்லதம்பி என்ற டிரைவர் சென்றார்.
இந் நிலையில் சம்பத், சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றபோது, லாரி லாக்கரில் இருந்த பணம் திருடு போய்விட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த கிரீம் லைன் நிறுவன அதிகாரி சீனிவாசலு போலீசில் புகார் செய்தார்.
பள்ளிகொண்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந் நிலையில் பள்ளிகொண்டாவை அடுத்துள்ள தட்டாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் சிறுவர்கள் 500 ரூபாய் நோட்டுகளுடன் உலவியுள்ளனர்.
இதைப் பார்த்த ஊர் மக்கள் சந்தேகமடைந்தனர். போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து சிறுவர்களைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, சின்னச்சேரி என்ற இடத்தில் உள்ள பாலத்தின் அடியில் உள்ள புதரில் 2 பேர் பணத்தை சாக்குபையில் போட்டு மறைத்து வைத்துச் சென்றனர். அதைப் பார்த்த நாங்கள் பணத்தை எடுத்து செலவு செய்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
பின்னர் ஆடு மேய்க்கும் சிறுவர்களின் வீட்டில் மீதமிருந்த ரூ. 28 லட்சத்து 16 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சம்பத் மீது சந்ேதகம் கொண்ட போலீசார் அவரிடம் உரிய முறையில் விசாரிக்கவே உண்மையைக் கொட்டினார் சம்பத்.
போலீஸாரிடம் அவர் கூறுகையில், லாரி டிரைவர் நல்லதம்பியும், நானும் பணத்தை திருடி சின்னச்சேரி பாலத்தின் கீழ் உள்ள புதருக்குள் மறைத்து வைத்தோம். பணத்தை மறைத்து வைத்துவிட்டு சில மாதங்கள் கழித்து எடுத்தால் சந்தேகம் வராது என்பதால் நாங்கள் அதை மறைத்து வைத்தோம் என்றார்.
இதையடுத்து சம்பத் மற்றும் நல்லதம்பியை போலீஸார் கைது செய்தனர்.













Click it and Unblock the Notifications