எதையும் விடமாட்டேன்: அந்தர் பல்டி முஷாரப்!
இஸ்லாமாபாத்:ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், அது தொடர்பாக நான் யாருக்கும் உறுதிமொழி அளிக்கவில்லை என்று முஷாரப் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் மறுத்துள்ளார்.
பாகிஸ்தானில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தன் மீது நாட்டு மக்களின் எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பெனாசிருடன் உடன்பாடு செய்துள்ளார்.
அந்த உடன்பாட்டின்படி பெனாசிருக்கு எதிரான ஊழல் புகார்களையும், அவரது கணவர் மீதான ஊழல் வழக்குகளையும் கைவிட முஷாரப் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதனால் அபுதாபியில் தங்கியிருக்கும் பெனாசிர் விரைவில் பாகிஸ்தான் திரும்ப இருக்கிறார்.
அதிபர் பதவியோடு ராணுவ தளபதியாகவும் இருந்து வரும் முஷாரப் தளபதியில் நீடிக்க கூடாது என்று பெனாசிர் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் வற்புறுத்தி வந்தன.
எனவே பெனாசிருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக முஷாரப் அறிவித்திருந்தார்.
ஆனால் தற்போது ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்ய முடியாது. இது தொடர்பாக நான் எவருக்கும் உறுதி மொழி கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் முஷாரப்-பெனாசிர் சமரச முயற்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முஷாரப்பின் கடும் எதிர்ப்பாளரான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரும் செப்டம்பர் 10ம் தேதி பாகிஸ்தான் திரும்பவுள்ளார்.
வந்தால் கைது என்ற முஷாரப்பின் எச்சரிக்கையையும் மீறி உச்ச நீதிமன்றத்தின் ஆதரவோடு திரும்பி வரும் ஷெரீப், முஷாரப்புக்கு பெரும் குடைச்சல் தரவுள்ளார்.