ஃபோர்ஜரி புகாரில் சிக்கிய தமிழருக்குகை கொடுக்கும் சிங்கப்பூர் பெண்மணி
சிங்கப்பூர்:பட்டச் சான்றிதழில் மோசடி செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழருக்கு, சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய-சீன வம்சவாளியைச் சேர்ந்த பெண்மணி முழு ஆதரவு கொடுத்துள்ளார். அந்தத் தமிழருக்கு சிங்கப்பூரில் நிரந்தரக் குடியுரிமை வாங்கித் தரவும் தீவிரமாக பாடுபட்டு வருகிறார்.
சர்ச்சையில் சிக்கிய அந்தத் தமிழரின் பெயர் சிவலிங்கம் சந்திரசேகரன். ஆறுமுகம் சிற்றறசு என்ற பெயரில் இவர் கடந்த 2002ம் ஆண்டு சிங்கப்பூருக்கு பணியாற்ற வந்தார். தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் பட்டம் பெற்றிருப்பதற்கான பட்டச் சான்றிதழை குடியுரிமை சோதனையின்போது காட்டினார்.
ஆனால் அது போலியான சான்றிதழ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பட்டச் சான்றிதழில் ஃபோர்ஜரி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர் மீதான வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அடித் அப்துல்லா, சந்திரசேகரனுக்கு 2 வார சிறைத் தண்டனை விதித்தார். 2,00 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதித்தார். மேலும் பொய் சொன்னதற்காக தனியாக 4,00 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறையில் தள்ளப்பட்ட சந்திரசேகரனுக்கு உதவ அவரது முதலாளியான இந்திய-சீன வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் பெண்மணி இவி சிங் லிம் முன்வந்துள்ளார்.
இவர் சிங்கப்பூரில் பாலிவுட் வெஜ்ஜிஸ் என்ற சிறிய பண்ணையை நடத்தி வருகிறார். இதில் வேலைபார்க்கத்தான் சந்திரசேகரன் வந்தார்.
சந்திரசேகரன் வழக்கை முன்னின்று நடத்தியதோடு நாட்டின் முன்னணி வக்கீல்களை வைத்து வாதாடினார். சந்திரசேகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் இவரே நீதிமன்றத்தில் செலுத்தினார்.
சந்திரசேகரன் குறித்து இவி சிங் கூறுகையில், சந்திரசேகரன் நல்ல உழைப்பாளி, நல்ல தொழிலாளி. பிரதமர் லீ சியன் லூங் சமீபத்தில் பேசுகையில், கடுமையாக உழைக்கும் வெளிநாட்டுக்காரர்கள், அவர்கள் குற்றங்களில் தொடர்பு கொண்டு சிறைத் தண்டனை பெற்றிருந்தாலும் கூட சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதை நீதிமன்றமும், அரசு நிர்வாகமும் நினைவில் கொள்ள வேண்டும். சந்திரசேகரன் தொடர்ந்து சிங்கப்பூரில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என நான் வலியுறுத்தவுள்ளேன். அவரை எனது புதல்வராகவும் தத்தெடுக்க உள்ளேன்.
சந்திரசேகரனுக்கு நிரந்தரக் குடியுரிமை பெற்றுத் தர தீவிரமாக முயற்சித்து வருகிறேன்.
நாம் தகுதியை மட்டும் பார்கக்க் கூடாது. ஒரு மனிதனின் உழைப்பு, குணம், தரம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். அதுதான் முக்கியமானது என்றார் இவி சிங்.
இவி சிங் சாதாரண பெண்மணியல்ல, சிங்கப்பூரின் பிரபலமான விளையாட்டு நிர்வாகியும் கூட. சிங்கப்பூர் வலை பந்து கழக காப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.