பண மோசடி: ஆசிரியையை ஓட ஓட விரட்டியபொதுமக்கள் - 150 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம் மணவளாக்குறிச்சி அருகே பண மோசடி செய்த ஆசிரியையை, ஓட ஓட விரட்டி முற்றுகையிட்ட பொதுமக்கள் 150 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மணவாளக்குறிச்சி அருகே உள்ளது கடியப்பட்டணம் மீனவர் கிராமம். இங்குள்ள வளனார் காலனியை சேர்ந்தவர் பனித்தாசன் என்ற ஏசுதாஸ். இவர் அப்பகுதியில் கடந்த 10 வருடங்களாக பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
ஏசுதாஸின் மனைவி சகாய டாலி. இவர் கடியபட்டணத்தில் உள்ள தூய இருதய உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஏசுதாஸ் நிதி நிறுவனங்கள் மூலம் ரூ.6 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஏசுதாஸ் தலைமறைவாகி விட்டார். பொதுமக்கள் கொந்தளிப்பால் சகாய டாலி போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று அவர் பள்ளிக்கூடத்திற்குப் போனபோது அவரைப் பொதுமக்கள் துரத்தினர். இதைப் பார்த்து பயந்த டாலி வேகமாக ஓடினார். ஆனாலும் விடாத பொதுமக்கள் அவரை ஓட ஓட விரட்டினர்.
அவரை முற்றுகையிட்டு பணம் குறித்து ஆவேசமாக கேட்டனர். அவருக்குப் பாதுகாப்பாக இருந்த போலீஸாரையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
பின்னர் போலீஸார் டாலியை பத்திரமாக அங்கிருந்து கூட்டிச் சென்று விட்டனர். இதுகுறித்து டாலிக்குப் பாதுகாப்பாக வந்த ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மணவாளகுறிச்சி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கூட்டமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பொதுமக்கள் 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications