சோனியாவுக்குக் கிடைத்த திடீர் முத்தம்!
ராஜமுந்திரி:ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, பெண் ஒருவர் திடீரென கன்னத்தில் முத்தமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த முத்தத்தை சோனியா காந்தி அன்புடன் ஏற்றுக் கொண்டார்.
![]() |
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஆந்திர மாநிலத்திற்கு வருகை தந்தார். ராஜமுந்திரியில் நடந்த நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தி வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் பயன் பெற்ற பெண்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அப்போது அவரிடம் பேசிய ஒரு பெண் திடீரென சோனியா காந்தியின் கையைப் பிடித்துக் குலுக்கினார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில், சோனியா காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டார்.
இதை சோனியா காந்தியோ அல்லது பாதுகாப்பாளர்களோ தடுக்கவில்லை. அந்தப் பெண்மணியின் முத்தத்தை சோனியா காந்தி புன்னகையுடனும், அன்புடனும் ஏற்றுக் கொண்டார்.
சோனியாவுக்கு கொடுக்கப்பட்ட முத்தத்தால் அங்கு பரபரப்பும், ஆச்சரியமும் நிலவியது. இருப்பினும் இதை சோனியா காந்தி பெரிதுபடுத்தவில்லை. மாறாக, தன்னிடம் பேசிய பெண்களுடன் மிகவும் சந்தோஷமாக உரையாடினார்.
பின்னர் ஹைதராபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், தீவிரவாதிகளின் ஈவு இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற செயலால் நமது நாடும், நமது மக்களும் பயந்து போய் விட மாட்டார்கள், பணிந்து போகவும் மாட்டார்கள்.
ஆகஸ்ட் 25ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த இரட்டை வெடிகுண்டுச் சம்பவத்தால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். பல அப்பாவி உயிர்களை இந்த சம்பவங்கள் காவு வாங்கியுள்ளன. நாடு அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதை விரும்பாத தீய சக்திகள்தான் இதுபோன்ற கொடூரச் செயல்களை நிகழ்த்தி வருகின்றன.
தீய சக்திகளின் நோக்கம் நிறைவேறாமல் தடுக்கும் வகையில், இந்த நேரத்தில் நமது நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து அந்த சக்திகளின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.













Click it and Unblock the Notifications