வைகோ காரில் அரிவாளுடன் ஏறிய<br>பெண்ணுக்கு இன்று மன நல சோதனை
மதுரை: மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் காரில் கதிர் அறுக்கும் கருக்கரிவாளுடன் ஏறிய பெண் மன நலம் பாதிக்கப்பட்ட நர்ஸ் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் நேற்று மாவட்ட மதிமுக செயலாளர் பூமிநாதன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வைகோ ரயிலில் வந்தார். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அவருக்கு ரயில் நிலையத்தில் மதிமுகவினர் வரவேற்பு கொடுத்தனர்.
அதன் பின்னர் வைகோ வெளியே வந்தார். காரில் ஏறப் போனபோது உள்ளே ஒரு பெண் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார். இது யார் என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டபோதுதான், உள்ளே ஒரு பெண் அமர்ந்திருப்பது மதிமுகவினருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து அந்தப் பெண்ணை சத்தம் போட்டு கீழே இறக்கினர். யார் என்று விசாரித்தபோது அவர் சரியாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து ரயில்வே போலீஸாரிடம் அப்பெண்ணை ஒப்படைத்தனர். பின்னர் வைகோ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அந்தப் பெண்ணை போலீஸார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த கைப்பையை சோதித்தபோது உள்ளே ஒரு கருக்கரிவாள், சிறிய கத்திரிக்கோல் ஆகியவை இருந்தன. நர்ஸ் படிப்புக்கான சான்றிதழும் இருந்தது.
அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் பாக்யலட்சுமி (38), தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் என்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்தது.
திருவனந்தபுரத்தில் பாக்யலட்சுமி நர்ஸாகப் பணியாற்றியுள்ளார். பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர விண்ப்பித்துள்ளார். கடந்த 31ம் தேதி நெல்லையிலிருந்து மதுரைக்கு வந்துள்ளார். அதற்கான ரயில் டிக்கெட் அவரிடம் உள்ளது.
பின்னர் பாக்யலட்சுமியை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இன்று அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படும் என டி.எஸ்.பி. மனோகரன் கூறியுள்ளார்.
இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. மருத்துவ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தெரிவித்தார்.
இதற்கிடையே, மதிமுக சார்பில் இந்தப் பெண் மீது புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை. இதனால் போலீஸாரே இந்தப் பெண் மீது புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் 13ம் தேதி அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்தபோதும் ரயில் நிலையத்தில் ஒருவர் கத்தியுடன் கூட்டத்தாரோடு சேர்ந்து வந்தார். அவரைப் பிடிக்க முயன்றபோது பாதுகாப்பு போலீஸாரை குத்தி விட்டு ஓடி விட்டார்.
இந்த நிலையில், தற்போது வைகோவின் காரில் அரிவாளுடன் ஒரு பெண் ஏறியுள்ளார். மதுரை ரயில்வே நிலையத்தில் இப்படி அடுத்தடுத்து பாதுகாப்புப் பணியில் குளறுபடி நிலவுது அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வைகோ சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மதுரை மாநகர காவல்துறை சார்பில் ரெயில்வே போலீசாருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. வைகோவுக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்தப் பெண் மன அழுத்தம், விரக்தி, பதட்டம், கவலை காரணமாக காரில் ஏறியிருக்கலாம். அவரிடம் காரை விட்டு இறங்கம்மா என்று கூறியவுடன் அவர் இறங்கி விட்டார். பின்னர்தான் அவரிடம் ஆயுதம் இருந்தது தெரிய வந்தது.
அந்தப் பெண் நமக்கு எதுவும் பிரச்சினை தரவில்லை. உள்நோக்கத்தோடும் அவர் வந்தது போலத் தெரியவில்லை. எனவேதான் போலீஸில் இதுகுறித்து புகார் கொடுக்கவில்லை.
எனக்கும், அவருக்கும் எந்தப் பகையும் இல்லை, அவரால் நமக்கு ஆபத்தும் இல்லை. ஒரு ஆண்டுக்கு முன்பே என் வீட்டுக்குப் பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டனர். ஆனால் நான்தான், பிரதமரிடமே எனக்குப் பாதுகாப்பு வேண்டாம் என்று கூறி விட்டேன். எனவே இந்தப் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறி அவர்களை அனுப்பி விட்டேன்.
நான் மக்களோடு இருக்கிறேன், எனக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு தேவையில்லை. எனக்கு எந்த ஆபத்தும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. என் வீட்டின் முன்பு ஆயுதங்ளுடன் கும்பலாக வந்தபோது கூட நான் பாதுகாப்பு கோரவில்லை என்றார் சிரித்துக் கொண்டே.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்குப் போன் செய்து நலம் விசாரித்தார். கவனமுடன் இருக்கும்படியும் அவர் வைகோவைக் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications