ஹைதராபாத் குண்டுவெடிப்பு: கைதான பெண்br/எங்கள் மாணவி அல்ல - சி.எம்.சி. மறுப்பு
வேலூர்:
ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பெண் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி.) மாணவி அல்ல இல்லை என்று சி.எம்.சி இயக்குநர் ஜார்ஜ் சாண்டி மறுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆந்திர போலீசார் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஷாபிரா ரப்ஜானி என்ற மாணவியும் ஒருவர். இவர் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் 2வது ஆண்டு மருத்துவம் படித்து வரும் மாணவி என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால் ஷாபிரா தங்களது கல்லூரியில் படிக்கவில்லை என்று சிஎம்சி மறுத்துள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஜார்ஜ் சாண்டி, முதல்வர் ஜெயப்பிரகாஷ் முலியல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஹைதராபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஷாபிரா ரப்ஜானி (27) என்ற பெண் சிஎம்சி மருத்துவக்கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி என்று செய்தி வெளியாகியிருந்தது.
இது முற்றிலும் தவறான செய்தி. கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் பெயரில் எங்கள் கல்லூரியில் யாரும் மருத்துவப்படிப்போ அல்லது நர்சிங் போன்ற பிற மருத்துவம் தொடர்பான படிப்பிலோ இல்லை.
கடந்த 5 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த ஆவணங்கள் முழுவதையும் பரிசோதித்து பார்த்து விட்டோம். இப்படிப்பட்ட பெயரில் எந்த பெண்ணும் கல்லூரியில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து போலீசாரிடமும் தகவல் தெரிவித்துவிட்டோம்.
அந்த பெண் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆந்திர மாநில போலீசார் எவரும் இதுவரை அது தொடர்பாக எங்களிடம் விசாரணை நடத்தவில்லை. விசாரணை நடத்தினால் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றனர்.
வேலூர் கல்லூரியில் தான் படித்தார்: போலீஸ்
ஆனால், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கைது செய்யப்பட்ட வங்கதேச பெண் ஷாபிரா ரப்ஜானி வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்தார் என்பதை உறுதி செய்துள்ளனர்.
ஷாபிரா, காட்பாடி ஆக்சீலியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்தவர் என்றும், அவர் காட்பாடி அருகேயுள்ள பாலபுரம்ஜான்சன் காலனியில் தங்கி படித்துள்ளார் என்று வேலூர் மாவட்ட எஸ்பி அருள்செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications