முறைகேடு புகார்.. சென்னையின் மெகா ப்ராஜெக்ட் ரத்து? அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு?
சென்னை: சென்னை திருவான்மியூர் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயர்நிலை சாலை அமைக்கப்படும் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூபாய் 700 கோடி முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கையாளும் விதமாக சென்னை நகரின் கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழித்தட சாலை மேம்பாலம் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் அமைக்கப்படும் என்று 2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, சுமார் 13.30 கி.மீ. நீளத்திற்கு 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.
இந்த மேம்பாலம், திருவான்மியூரில் ECR-Lattice Bridge சாலை சந்திப்பிற்கு முன்பாக தொடங்கி, உத்தண்டியில் முடிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இருவழிப் போக்குவரத்துக்காக 17.25 மீட்டர் அகலத்துடன், 5.5 மீட்டர் உயரத்தில், நான்கு வழித்தட சாலை மேம்பாலம் முழு நீளத்தில் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருவான்மியூர் - உத்தண்டி இடையே 4 வழி உயர்மட்ட பாலத்தை ரூ.1,400 கோடியில் கட்டித் தருவதாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தது என்றும், அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்காமல், ரூ.2,100 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியிருந்த ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்றும் புகார் எழுந்தது.
அண்மையில், கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய்யும், சென்னையில் உயர்நிலை சாலைத் திட்டம் அமைப்பதில் ஊழல் நடந்திருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் திருவான்மியூர் உத்தண்டி உயர்நிலை சாலை திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சென்னை மாநகராட்சியின் பல்வேறு ஒப்பந்தங்களையும், போக்குவரத்துத் துறை ஒப்பந்தங்களையும் ரத்து செய்து தவெக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ரூ.2,100 கோடியில் அமைக்கத் திட்டமிடப்பட்ட திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட சாலை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications