இறந்தது மனைவி என தெரியாமல்br/விசாரணை நடத்திய போலீஸ்காரர்
சென்னை:
காஸ் கசிவால் தீவிபத்து ஏற்பட்டு மனைவி இறந்தது தெரியாமல், யார் அவர் என்று விசாரணை நடத்திய போலீஸ்காரர், கடைசியில் இறந்தது தனது மனைவி என்று தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் போலீஸ்காரர் ரங்கநாதன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சுமதி (45). இவர் மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவர்களது மகன் ஜெகதீஸ்வரன் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றி வருகிறார்.
நேற்று மதியம் ரங்கநாதன் வேலைக்குப் போய் விட்டார். சுமதி மட்டும் வீட்டில் இருந்தார். சமையல் வேலையில் சுமதி ஈடுபட்டிருந்தார். அப்போது காஸ் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதில் சுமதியின் உடல் கருகியது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப் போயிருந்தார் சுமதி.
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர் குறித்து விசாரிக்க வேண்டியது மருத்துவமனை காவல் நிலைய போலீசாரின் டூட்டியாகும்.
தீக்காயத்துடன் ஒரு பெண் கொண்டு வரப்பட்டதையறிந்து அங்கு வந்த ரங்கநாதன், விபத்தில் சிக்கியது யார் என்று விசாரணை நடத்தினார். உடனடியாக அவருக்கு எந்த விவரமும் கிடைக்கவில்லை.
முழு அளவில் கருகிவிட்டதால் அது தனது மனைவி தான் என்றும் ரங்கநாதனுக்குத் தெரியவில்லை.
இதற்கிடையே, தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் சுமதி இறந்து விட்டார்.
அதன் பின்னர் தான் அது தனது மனைவி என்று ரங்கநாதனுக்கு தெரியவந்தது. இதையறிந்து ரங்கநாதன் மருத்துவமனையிலேயே புரண்டு கதறி அழுதது அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications