முதலைக் கண்ணீர் வடிக்கும் ஜெ.: நேரு தாக்கு
சென்னை:
தனது ஆட்சியில் ஒரு முறை கூட ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாத ஜெயலலிதா, இப்போது ஆட்டோ டிரைவர்களுக்கு ஆதரவாக பேசுவது போல காட்டிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இதை ஆட்டோ டிரைவர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு முறை கூட ஆட்டோ கட்டணத்தை ஜெயலலிதா உயர்த்தவில்லை. ஆனால் இப்போது ஆட்டோ டிரைவர்களுக்குப் பரிந்து பேசுவதாக காட்டிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார். ஆனால் இதை ஆட்டோ டிரைவர்கள் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், 56 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் ஆட்டோ கட்டணத்தை ஒருமுறை கூட ஜெயலலிதா திருத்தவில்லை, உயர்த்தவில்லை.
1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தியது. அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சி, அதை அப்படியே கடைசி வரை வைத்திருந்தது. திருத்தவே இல்லை. உண்மை இப்படி இருக்க, ஏதோ, ஆட்டோ டிரைவர்கள் மீது தான் மிகவும் கவலையுடனும், அக்கறையுடனும் இருப்பது போல காட்டிக் கொள்ள முயலுகிறார் ஜெயலலிதா.
கடந்த மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தபோது, பல்வேறு ஆட்ேடா ஓட்டுநர் சங்கங்கள், நுகர்வோர் சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த ஒரு ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 14 என்றும், கூடுதல் கிலோமீட்டர் ஒவ்வொன்றுக்கும் ரூ. 6 என கட்டண நிர்ணயம் செய்யப்பட்டது.
சென்னையில் இந்த கட்டண மாற்றம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. பிற மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய கட்டண விகிதத்தை அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி கோவை மாவட்டத்தில், அம்மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில்தான் ஒரு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.
உடனடியாக அவரது குடும்பத்துக்கு கோவை மாவட்ட திமுக ரூ. 55 ஆயிரம் குடும்ப நல நிதியாக வழங்கியது. அரசு நிதியுதவியும் விரைவில் வழங்கப்படவுள்ளது.
நிலைமை இப்படி இருக்க, ஆட்டோ டிரைவர்களின் ரட்சகர் போல தன்னைக் காட்டிக் கொண்டு செயல்பட நினைக்கிறார் ஜெயலலிதா. ஆனால் இதைய யாரும் நம்பத்தான் போவதில்லை என்று கூறியுள்ளார் நேரு.












Click it and Unblock the Notifications