லாலுவுடன் அச்சுதானந்தன் சந்திப்பு;br/புது ரயில் மண்டலம் கேட்கிறார்!
டெல்லி:
கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், சேலம் ரயில் கோட்டம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். அப்போது கேரளாவுக்கென தனியாக புதிய ரயில்வே மண்டலத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சேலம் ரயில் கோட்டத்தை கேரளா கடுமையாக எதிர்த்து வருகிறது. கேரளாவின் போக்குக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இரு தரப்பையும் சமரசப்படுத்தி சுமூக முடிவு காண முடியாமல் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திணறி வருகிறார்.
இரு மாநில முதல்வர்களுமே பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று கூறி பிரச்சினையை பிரதமரிடம் விட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டார். இதனால் திட்டமிட்டபடி செப்டம்பர் 14ம் தேதி சேலம் ரயில் கோட்டத் தொடக்க விழா நடைபெறுமா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இருப்பினும் திட்டமிட்டபடி சேலம் கோட்ட தொடக்க விழா நடைபெறும். முதல்வர் கருணாநிதி அதில் பங்கேற்பார். அப்படி விழா நடைபெறாவிட்டால் எனது அமைச்சர் பதவியை துறந்து விட்டு தீவிரப் போராட்டத்தில் குதிக்கத் தயங்க மாட்டேன் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கேரள முதல்வர் அச்சுதானந்தனை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் டெல்லிக்கு அழைத்திருந்தார். அதன் பேரில் அச்சுதானந்தன் இன்று டெல்லி சென்று லாலுவை ரயில் பவனில் சந்தித்தார்.
அப்போது, சேலம் ரயில் கோட்டம் அமைவதை கேரளா எதிர்க்கவில்லை. ஆனால், கேரளாவுக்கென தனியாக ரயில்வே மண்டலத்தை அமைக்க வேண்டும். அதை நாங்கள் தீவிரமாக வலியுறுத்துகிறோம் என அச்சுதானந்தன், லாலுவிடம் கூறியதாக தெரிகிறது.
இதே கோரிக்கையுடன் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அச்சுதானந்தன் இன்று சந்திக்கிறார்.
இந்தப் புதிய சூழ்நிலையைத் தொடர்ந்து சேலம் கோட்டம் தொடர்பாக மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications