கட்டப் பஞ்சாயத்து: 'தீர்ப்பு' கூறிய 'நாட்டாமை'க்கு சிறை!
கடையநல்லூர் (திருநெல்வேலி):
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தீர்ப்பு என்ற பெயரில் ஒருவரை ஊர் மக்கள் காலில் விழ வைத்ததாக ஊர் நாட்டாமை உள்ளிட்ட 4 பேருக்கு 9 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடையநல்லூர் அருகே உள்ள பூவன்குறிச்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் அந்த ஊரின் முக்கிய பிரமுகரான தங்கவேல் மனைவி சுசீலாவுக்கும் நிலத் தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கடந்த 2003ம் ஆண்டு ஊர்க் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.
இதில், சுசீலா ஊரின் முக்கியப் பிரமுகரின் மனைவி என்பதால், அவருக்கு ஆதரவாக 'தீர்ப்பு' வழங்கப்பட்டது. கட்டப் பஞ்சாயத்தை நடத்திய பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊர் மக்கள் காலில் சிவக்குமார் விழ வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், ரூ. 3000 அபராதமும் விதித்தனர்.
இது போதாதென்று சிவக்குமாரின் குடும்பத்தாரை ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பதாகவும் அறிவித்தனர்.
இந்தத் தீர்ப்பால் கொதிப்படைந்த சிவக்குமாரின் மனைவி உஷா, ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கட்ட பஞ்சாயத்து செய்தவர்களை போலீசார் அழைத்து விசாரித்தனர். ஆனால் நாங்கள் வைத்துதான் சட்டம் என்ற ரீதியில் பஞ்சாயத்தார், 'பஞ்சாயத்து' செய்துள்ளனர்.
இதையடுத்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் உஷா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டப் பஞ்சாயத்து செய்த நாட்டாமை கனகராஜ் (40), தங்கவேல் (45), சுசீலா (38) மற்றும் பாலையா(42) ஆகிய 4 பேருக்கும் தலா 9 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications