நண்பனின் தங்கையைக் கடத்திய மாணவர்கள்br/- பக்கத்து வீட்டு பாட்டியால் தப்பினார்!
திண்டிவனம்:
பிளஸ்டூ படிக்கும் மாணவியை அவரது அண்ணனுடன் படிக்கும் நான்கு கல்லூரி மாணவர்கள் கடத்திச் சென்றனர். அவர்களிடமிருந்து தப்பிய மாணவியை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீமிலி. இவர் பிளஸ்டூ படித்து வருகிறார். இவரது அண்ணன் ராஜா. கல்லூரியில் படித்து வருகிறார்.
ராஜாவுக்கும், அவருடன் படிக்கும் நான்கு மாணவர்ளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும், ராஜாவின் தங்கையைக் கடத்த தீர்மானித்தனர்.
இதையடுத்து நேற்று அதிகாலை ராஜா வீட்டுக்கு நான்கு பேரும் வந்தனர். அப்போது ராஜாவும், அவரது தந்தையும் வீட்டில் இல்லை. ஸ்ரீமிலியும், அவரது தாயாரும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
இதையடுத்து நான்கு பேரும் வீட்டிற்குள் சென்றனர். அண்ணனின் வகுப்புத் தோழர்கள் என்பதால் அவர்களிடம் ஸ்ரீமிலி பேசியுள்ளார். அப்போது நான்கு பேரும் மயக்கப் பொடியை ஸ்ரீமிலி மீது தூவி அங்கிருந்து அவரைக் கடத்தினர்.
காரில் அவரை ஏற்றிய அவர்கள் கோயம்பேட்டில் உள்ள ஒரு வீட்டுக்குக் கொண்டு சென்றனர். அப்போது அருகில் வசித்து வரும் ஒரு பாட்டி இதைப் பார்த்துள்ளார். ஸ்ரீமிலியை வீட்டில் அடைத்து வைத்த பின்னர் நான்கு பேரும் வெளியே சென்றனர். அவர்கள் போன பின்னர் ஸ்ரீமிலிக்கு மயக்கம் தெளிந்தது.
இதையடுத்து அவர் பக்கத்து வீட்டுப் பாட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் பஸ் நிலையம் வந்து சேலம் செல்லும் பேருந்தில் ஏறினார்.
பேருந்து திண்டிவனத்தை நெருங்கியபோது தான் இறங்கிக் கொள்வதாக கண்டக்டரிடம் தெரிவித்தார். அவருக்கு பிரச்சினை ஏற்பட்டிருப்பதை உணர்ந்த கண்டக்டர் அரசுப் போக்குவரத்துக் கழக திண்டிவனம் கிளை மேலாளருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து மேலாளர் கிருஷ்ணமூர்த்தி விரைந்து வந்தார். அவரிடம் நடந்ததைக் கூறினார் ஸ்ரீமிலி. இதையடுத்து அவரது தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.
இதைத் தொடர்ந்து ஸ்ரீமிலியின் தந்தை திண்டிவனம் விரைந்து வந்தார். அவரிடம் ஸ்ரீமிலியை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications