தமிழ் நடிகன் கார் நிறுத்துவதை தடுப்பதா?br/விஜயகாந்த் மீது டி.ஆர். பாய்ச்சல்!
சென்னை:
தமிழ் நடிகன் வடிவேலு தன் வீட்டு முன்பு கார் நிறுத்தியதை விஜயகாந்த் தடுக்கிறார் என்றால், இவர் முதல்வர் ஆனால் என்னென்ன நடக்கும் என்பதை தமிழக மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சொற்ப தொண்டர்கள் பிளஸ் சொற்ப தலைவர்களுடன் திகழும் லட்சிய திமுக, சமீபத்தில் திமுக கூட்டணியிலிருந்து அதிரடியாக வெளியேறியது. இனிமேல் யாருக்கும் பல்லக்கு தூக்க மாட்டேன், யாரையும் ஆதரிக்க மாட்டேன், தனித்து செயல்படுவேன் என விஜய டி.ராஜேந்தர் முழங்கினார்.
இந்த நிலையில் தனது கட்சியின் பொதுக்குழுவை தனது தி. நகர் வீட்டில் இன்று கூட்டினார் ராஜேந்தர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராஜேந்தர் பேசுகையில், திமுக கூட்டணியில், நாங்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் தொடரந்து நீடிக்க வேண்டுமானால் உரிய அங்கீகாரத்தை திமுக தர வேண்டும்.
தேர்தல் நேரத்தில் மட்டும் மதித்தால் போதாது. மற்ற நேரங்களிலும் மதித்து நடக்க வேண்டும். இதை எங்களை அணுகிய திமுக தரப்பிடம் கூறியுள்ளோம். விரைவில் முதல்வர் கருணாநிதியை நான் நேரில் சந்தித்து இதுகுறித்து விளக்கவுள்ளேன்.
எனது கட்சியில் சிம்புவின் ரசிகர்கள் நிறையப் பேர் இணைந்துள்ளனர். ஆனால் சிம்பு அரசியலில் இல்லை. சிம்புவுக்கு நான் ஃபாதர், அவரது ரசிகர்களுக்கு நான் காட்ஃபாதர்.
அடுத்த ஆண்டு பெரும் மாநாட்டைக் கூட்டப் போகிறோம். எங்களது செல்வாக்கைக் காட்டப் போகிறோம்.
விஜயகாந்த்துக்கு எங்கிருந்து கட்சி நடத்தப் பணம் வருகிறது, யார் தருகிறார்கள் என்பதை அவர் வெளியில் சொல்ல வேண்டும். இது வெட்ட வெளிச்சத்திற்கு வரும் நாள் தொலைவில் இல்லை.
ரூ. 100 கோடி செலவு செய்து விட்டேன் என்கிறார் விஜயகாந்த். நான் அவருக்கு விடுகிறேன் சவால், அதை ஏற்கத் தயாரா அவர்?. ஒரு சாதாரண நடிகரான விஜயகாந்த்துக்கு எப்படி வந்தது ரூ. 100 கோடி? யார் கொடுத்தது? எப்படிக் கொடுத்தார்கள்? வருமான வரிக் கணக்கு காட்டத் தயாரா?
விஜயகாந்த் கட்சியில் ஒவ்வொரு பதவிக்கும் விலை வைத்துள்ளனர். ஊழலை ஒழிக்கப் போவதாக கூறும் அவரது கட்சியில் ஊழலில் மலிந்து போன பல மாஜிக்கள் நிறைந்துள்ளனர். இவரா ஊழலை ஒழிக்கப் போகிறார்?
ஒரு தமிழ் நடிகனான வடிவேலுவை, தனது வீட்டு முன்பு காரை நிறுத்தக் கூடாது என்று தொண்டர்களை ஏவி விட்டு ரகளை செய்துள்ளார். இவரெல்லாம் முதல்வர் ஆனால் என்னென்ன நடக்கும் என்பதை மக்களே சிந்திக்கட்டும் என்றார் ராஜேந்தர்.