கோடநாடு எஸ்டேட் சென்றார் ஜெ.
கோவை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு ஓய்வு எடுப்பதற்காக சென்றுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையில் சிக்கியது கோடநாடு எஸ்டேட். ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள இந்த எஸ்டேட்டில் விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், ஏராளமான மரங்களை வெட்டி அறைகள் கட்டப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்து ஆய்வுகளும் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா நேற்று ஓய்வு எடுப்பதற்காக கோடநாடு எஸ்டேட் வந்தார். விமானம் மூலம் கோவை வந்த ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் கோடநாடு எஸ்டேடுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவை வரவேற்று கையசைத்தனர்.
கோடநாடு எஸ்டேட்டில் 10 நாட்களுக்கு ஜெயலலிதா ஓய்வு எடுப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications