விநாயகர் சிலை தலையில் விழுந்து 3 பேர் பலி
கடப்பா:
ஆந்திர மாநிலத்தில் ஆற்றில் கரைக்க முயன்ற விநாயகர் சிலை தலையில் விழுந்து 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், கடப்பாவில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு விநாயகர் சிலையின் முன்பு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வரிசையாக அப்பகுதியில் உள்ள ஏரியில் கரைக்கப்பட்டு வருகின்றது.
அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலையை பக்தர்கள் சிலர் வண்டியில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் அதனை புட்டாய்பள்ளி ஏரிக்கு கரைக்க கொண்டு சென்றனர்.
ஆனால் அந்த ஏரியில் தண்ணீர் அதிகம் இல்லாத காரணத்தால், விநாயகர் சிலையை தூக்கிக் கொண்டு ஏரிக்கு நடுவில் சென்று இருந்த சொற்ப நீரில் கரைக்க முயன்றனர்.
ஊர்வலத்தில் வந்தவர்கள் விநாயகர் சிலையை தூக்கிக் கொண்டு ஏரியில் இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக விநாயகர் சிலை தூக்கிச் சென்றவர்களின் மீது தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் சுனில்குமார் (16), சம்பத்குமார் (30) மற்றும் ரவிசங்கர் (30) ஆகியோர் சிலையோடு ஏரியில் மூழ்கி இறந்தனர்.