பெங்களூரில் தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிப்பு - 2 பேர் பரிதாப சாவு
பெங்களூர்:
பெங்களூரில், முதல்வரின் மகள் செல்வி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்ட சில மணி நேரங்களில், தமிழக அரசு விரைவுப் பேருந்தை ஒரு கும்பல் தீவைத்துக் கொளுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் பெங்களூர் வீட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சைத் தொடர்ந்து மடிவாளா பகுதியில், தமிழக அரசு விரைவுப் பேருந்தை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி தீவைத்து எரித்தது.
நேற்று இரவு பெங்களூரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து கிளம்பியது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இரவு 9.45 மணியளவில் பேருந்து, ஓசூர் சாலையில் உள்ள பொம்மனஹள்ளி பகுதியில், ஆக்ஸ்போர்ட் கல்லூரி அருகே வந்தது.
அப்போது ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்து நிறுத்தி பெட்ரோல் ஊற்றி பஸ்சுக்குத் தீவைத்து விட்டு ஓடி விட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த நிலையிலும் பேருந்துக்குத் தீவைக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வேகம் வேகமாக பேருந்திலிருந்து அனைவரும் இறங்கினர். ஆனால் 2 பேர் மட்டும் பேருந்திலிருந்து இறங்க முடியாமல் சிக்கி உயிரிழந்தனர். இதில் ஒரு குழந்தையும் அடக்கம் என்று கூறப்படுகிறது.
நடுச் சாலையில் பேருந்து தீப்பிடித்து எரிவதைப் பார்த்ததும் அந்த வழியாக போனவர்கள் விரைந்து வந்து பயணிகள் கீழே இறங்க உதவி செய்தனர்.
இந்த சம்பவத்திற்கும் வி.எச்.பியினரே காரணமாக இருக்க முடியும் என சந்தேகிக்கப்படுகிறது. முதலில் இது விபத்து என்று கூறப்பட்டது. ஆனால் பேருந்தின் டிரைவர்தான், ஒரு கும்பல் வழிமறித்து தீவைத்ததாக தெரிவித்தார். இதையடுத்தே இது திட்டமிட்ட சம்பவம் என்பது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தையடுத்து தமிழகத்திலிருந்து பெங்களூர் வந்து கொண்டிருந்த அனைத்து அரசுப் பேருந்துகளும் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. நேற்று இரவு முழுவதும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பிற தனியார் வாகனங்களும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயக்கப்படவில்லை.
இதேபோல நீலகிரி மாவட்டத்திலில் உள்ள கர்நாடக எல்லை வரை மட்டுமே தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கர்நாடகத்திற்குள் அரசுப் பேருந்துகள் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.