பொள்ளாச்சியில் ரயில் மறியல் செய்த வைகோ கைது
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் இன்று ரயில் மறியல் செய்த வைகோ உட்பட 1,000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் கோட்டம் அமைப்பதற்காக மதுரை கோட்டத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்திற்கு தாரை வார்த்ததற்காக இன்று மதிமுக சார்பில் பொள்ளாச்சியில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
இதற்காக கொட்டும் மழையில் அதிகாலை 5 மணி முதல் திருவள்ளுவர் திடலில் மதிமுக, அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய வைகோ,
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்திலிருந்து மீட்கும் வரை மதிமுகவின் போராட்டம் தொடரும் என்றார்.
பின்னர் அங்கிருந்து காலை 7.15 மணிக்கு வைகோ தலைமையில் பேரணி புறப்பட்டது. பேரணியை அதிமுக அமைப்பு செயலாளர் கரூர் சின்னச்சாமி தொடங்கி வைத்தார். 7.30 மணிக்கு பேரணி பொள்ளாச்சி ரயில் நிலையம் வந்தடைந்தது.
அப்போது பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடுக்கு பயணிகள் ரயில் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த ரயிலின் முன்பு வைகோ உட்பட தொண்டர்கள் அனைவரும் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சிறிது நேரத்திலேயே திண்டுக்கல்லில் இருந்து போத்தனூருக்கு செல்லும் ரயில், மற்றும் பாலக்காட்டிலிருந்து திண்டுக்கல் செல்லும் ரயில் வந்தது. அந்த ரயில்களின் முன்பும் மதிமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வைகோ உட்பட 1,000க்கும் மேற்பட்ட அதிமுக, மதிமுக தொண்டர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த ரயில் மறியலால் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அனைத்து ரயில்களும் தாமதமாகக் கிளம்பிச் சென்றன.
வைகோவுக்கு ஜெயலலிதா வாழ்த்து:
ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், தமிழ்நாட்டிற்கு எதிராக மத்திய அரசு கொடுக்கும் தாக்குதலை வேரோடு தகர்த்து எறியும் தங்களது போராட்டம் வெற்றி பெற தங்களுக்கும், மதிமுக தொண்டர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications