கருணாநிதி மகள் வீட்டில் தாக்குதல்- சிவராஜ் பாட்டீல், ராமதாஸ், வீரமணி கண்டனம்
சென்னை:
பெங்களூரில் உள்ள கருணாநிதியின் மகள் செல்வி இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ். காவிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்து படுகோழைத்தனமான செயல் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் பற்றி முதலமைச்சர் கருணாநிதி கூறிய கருத்துகளுக்காக, ராமாயணம் என்பது புராணமே தவிர, வரலாறு அல்ல என்று அறிவியல் ரீதியான கருத்தினைக் கூறியதற்காக, உரிய முறையில் பதில் அளிக்க தெரியாதவர்கள் கர்நாடகத்தில் பெங்களூரில் உள்ள கருணாநிதியின் மகள் செல்வி இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ். காவிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பது படுகோழைத்தனமான செயல் ஆகும். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
கருணாநிதி கொள்கை ரீதியாகக்கூறும் கருத்துக்கு, கருத்து அடிப்படையில் பதில் தர முடியாத கோழைகள், இப்படி காலித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருணாநிதி கூறிய கருத்துக்கும், அவரது மகள் இல்லத்திற்கும் என்ன சம்பந்தம்? இப்படிப்பட்ட அநாகரிகச் செயல்களை அனைவரும் கண்டிப்பதோடு, இவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதையும், இவர்களது வாதங்களில் உள்ள பலவீனம் பற்றியும் நாடு தெரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பு ஆகும்.
இந்த விவகாரத்தில் தவறு செய்த கும்பல் மீது கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வீரமணி.
தமிழக பஸ் எரிக்கப்பட்டு அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவராஜ் பாட்டீல், ராமதாஸ் கண்டனம்:
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் முதல்வர் கருணாநிதியை தொடர்பு கொண்டு தனது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்தார்.
இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ராம பக்தர்கள் என்ற போர்வையில் முதல்வரின் மகள் செல்வி வீட்டைத் தாக்கியவர்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.