திருவிழாவில் பட்டாசு வெடித்து 7 பேர் பலி
சென்னை:
சென்னை அருகே மீனவ கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
சென்னை, எண்ணூர் அருகே உள்ள தாழங்குப்பம் மீனவ கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. அப்போது வான வேடிக்கை நடத்தப்பட்டது. திருவிழாவில் கலந்து கொள்வதை விட இந்த வான வேடிக்கையை காண்பதற்கு சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர்.
வானில் வெடித்து பூக்கள் போல் சிதறிய பட்டாசுகளை பார்த்து உற்சாகத்துடன் கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். இவர்களின் ஆரவாரம் வெகு நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் வான வேடிக்கைக்காக பற்ற வைத்த ஒரு சக்தி வாய்ந்த பட்டாசு வானில் சீறி பாய்வதற்கு பதிலாக கூட்டத்தில் பாய்ந்து வெடித்து சிதறியது.
பட்டாசு கூட்டத்திற்குள் பாய்ந்ததும் அனைவரும் சிதறி ஓடினார்கள். பட்டாசு வெடித்ததில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில் திருவல்லிக்கேணி மேட்டுக்குப்பத்தை சேர்ந்த மதி என்பவரது மனைவி ஈஸ்வரி (45) அதே இடத்தில் பலியானார்.
தீக்காயம் அடைந்து ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஜெகநாதன் (14), செல்வஅரசு (52), வானதி(35), ஆறுமுகம் (30), தீபன் (10) மற்றும் சிவகாமி (35) ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டனர். இறந்தவர்களில் வானதி மற்றும் தீபன் ஆகியோர் தாயும், மகனும் ஆவர்.












Click it and Unblock the Notifications