பழனி நில மோசடி வழக்கு! முக்கிய பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு! சல்லடை போட்டு தேடுவதால் பரபரப்பு
திண்டுக்கல்: பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி முறைகேடு விவகாரத்தில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டினின் நண்பர் ஜெயபிரகாஷ் வீட்டிலும் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.
பழனி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தங்களது 3ம் நாள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல்லில் சார்பதிவாளர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், பழனியில் நிலம் வாங்கிய சேதுபதியின் தோட்ட வீடு மற்றும் சாட்சி கையெழுத்திட்ட திமுக வார்டு செயலாளர் இல்லம் உள்பட மொத்தம் 4 இடங்களில் இன்று அதிகாலை முதல் சிபிசிஐடி போலீசார் சோதனையிலும் விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்திய அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி வழக்கில், சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் முறைகேடுகள் தொடர்பாகப் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் மெகா சோதனையில் இறங்கியுள்ளனர்.
அதன்படி, இந்த சர்ச்சைக்குரிய பத்திரப்பதிவை மேற்கொண்ட சார்பதிவாளரின் திண்டுக்கல் இல்லத்தில் ஒரு குழுவினர் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாகப் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும் 3 இடங்கள் என மொத்தம் 4 இடங்களில் இந்தச் சோதனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பழனி அருகே டி.கே.என். புதூர் பகுதியில் வசித்து வரும், முறைகேடாக நிலத்தை வாங்கியதாகக் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் சேதுபதி என்பவரது தோட்ட வீட்டிற்குள் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
அதேபோல, இந்த நில விவகாரப் பத்திரப் பதிவின் போது சாட்சி கையொப்பமிட்ட பழனி நகராட்சியின் திமுக வார்டு செயலாளர் லட்சுமணன் என்பவரது இல்லம் மற்றும் இதில் தொடர்புடைய மற்றொரு இடத்திலும் போலீசார் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டன்சத்திரத்திலும் சிபிசிஐடி போலீசார் தங்களது சோதனையைத் தொடங்கியுள்ளனர். இந்த நில மோசடி விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் நெருங்கிய நண்பரும், பத்திரப்பதிவு எழுத்தருமான ஜெயப்பிரகாஷ் என்பவரின் இல்லத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயப்பிரகாஷ் வீட்டிற்குள் இன்று காலை திடீரென நுழைந்த சிபிசிஐடி ஆய்வாளர் சேகர் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வீட்டின் கதவுகளைப் பூட்டி தீவிர சோதனை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சார்பதிவாளருடன் ஜெயப்பிரகாஷிற்கு உள்ள நட்பு மற்றும் இந்த 100 கோடி ரூபாய் நிலப் பத்திரப் பதிவில் இவருடைய பின்னணி என்ன என்ற கோணத்தில் இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications