இந்தியாவில் சுனிதா வில்லியம்ஸ்!
அகமதாபாத்:
விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி புதிய சாதனை படைத்தவரான, அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வந்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா, பூர்வீகத்தால் இந்தியர். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி புதிய சாதனை படைத்தவரான சுனிதா, உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் இதயங்களிலும் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் இன்று இந்தியாவுக்கு வந்தார். குஜராத் மாநிலம் அமகதாபாத்திற்கு இன்று காலை அவர் ஏர் இந்தியா விமானம் மூலம் வந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய முறைப்படி அவருக்கு நெற்றியில் திலகமிட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது. உற்றார், உறவினர்கள் ஆகியோருடன் பெரும் திரளான பொதுமக்களும் கூடி விட்டதால் சுனிதாவை பத்திரமாக வெளியே கொண்டு வருவதற்குள் பாதுகாவலர்கள் திணறிப் போய் விட்டனர்.
அகமதாபாத் வந்து சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புகழ் மிக்க சபர்மதி ஆசிரமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
சபர்மதி ஆசிரமத்திற்கு அவரு வருகை தருவது குறித்து ஆசிரம மாணவர் வினய் பார்மர் கூறுகையில், நாங்கள் அனைவரும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். சுனிதாவை வரவேற்க ஆவலுடன் உள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் விண்வெளியில் இருந்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்று கேட்பேன் என்றார்.
சபர்மதி ஆசிரமத்தில் வழிபாடு நடத்திய பின்னர் முன்னாள் அமைச்சரும், உறவினருமான ஹரேன் பாண்ட்யாவின் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் சுனிதா. ஹரேன் பாண்ட்யா படுகொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். (இந்தக் கொலைக்கு முதல்வர் நரேந்திர மோடியை பாண்ட்யாவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது)
நாளை அவர் தனது பூர்வீக இல்லம் உள்ள ஜுலாசான் கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு தனது குடும்பத்தினர், உறவினர்களைச் சந்திக்கிறார்.
சுனிதாவின் வருகையால் அவரது தந்தை தீபக் பாண்ட்யா பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார். அவர் கூறுகையில் சுனிதாவின் வருகையால் நாங்கள் சந்தோஷத்துடன் உள்ளோம். அவர் இந்திய மக்களுக்கு நன்றி சொல்லத்தான் இங்கு வந்துள்ளார் என்றார்.
இந்தியாவில்ல் ஐந்து நாட்கள் தங்கவுள்ளார் சுனிதா. தனது பயணத்தின் முக்கிய அம்சமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். அகமதாபாத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
குஜராத் மாநில ஆளுநர் நடத்தும் பாராட்டு விழாவிலும் அவர்
பங்கேற்கிறார்.
இந்த நிலையில் சுனிதாவை வரவேற்க குஜராத் மாநில அரசு சரியான முறையில் ஏற்பாடுகள் செய்யவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் குறைபட்டுள்ளனர்.
கடைசியாக 1998ம் ஆண்டு தனது குடும்பத்தினரை சந்திக்க இந்தியா வந்திருந்தார் சுனிதா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications