மாமியார் வீட்டினரிடமிருந்து கணவரை மீட்க கோரி கமிஷனரிடம் பெண் புகார்
சென்னை:
தனது மாமியார் வீட்டினரின் பிடியில் இருக்கும் கணவனை மீட்டுத் தருமாறு கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார் கொடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் வாசு. இவருக்கும் சித்ரா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வாசு இறந்து விட்டார். இதனால் சித்ரா தனது குழந்தைகளுடன் சென்னையில் தங்கியுள்ளார்.
விதவை பெண்ணான சித்ராவுக்கு உதவி செய்வதாக சொல்லிக் கொண்டு பிரேம்குமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். சித்ராவுக்கு குடும்ப நண்பராக இருந்து உதவி செய்த பிரேம்குமார் பின்பு சித்ராவுக்கு வாழ்வு தருவதாக சொல்லியுள்ளார்.
சித்ரா இதை மறுத்தாலும், ஆசை வார்த்தை சொல்லி சித்ராவை மயக்கி திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் ஆம்பூரில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையில் தன் குடும்பத்தாரை பார்க்க சென்னை வந்துள்ளார் பிரேம்குமார். அங்கிருந்து போன் செய்து சித்ராவை பாண்டிச்சேரி முகவரி கொடுத்து, நீ இந்த இடத்துக்கு வா, என்னுடைய அம்மாவை சமாதானப்படுத்தினால் சேர்ந்து வாழலாம் என்று சொன்னார்.
கணவரின் பேச்சை கேட்டு பாண்டிச்சேரிக்கு புறப்பட்டு சென்ற சித்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு போனால், பிரேம் குமாரின் தாய், தங்கை மற்றும் அவரின் பெரியம்மா, அவரது மகன் ஆகியோர் சித்ராவை கண்மூடித்தனமாக தாக்கி மயக்கமடையச் செய்துவிட்டனராம்.
மயக்கம் தெளிந்த பின்னர் கணவர் பிரேம்குமாரையும் காணாமல் தவித்திருக்கிறார். பின்னர் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வந்து சேர்ந்த சித்ரா தன் கணவனை மீட்டுத் தருமாறு சென்னை காவல்துறை கமிஷ்னரிடம் புகார் கொடுத்துள்ளார்.