செல்வி வீடு தாக்குதல்: பஜ்ரங் தள், வி.எச்.பி, ராமசேனா தொண்டர்கள் 10 பேர் கைது!
பெங்களூர்:
முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் பெங்களூர் வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக பஜ்ரங் தள், விஸ்வ இந்து பரிஷத், ராம சேனா ஆகிய அமைப்புளைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
ராமர் குறித்து முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் வசித்து வரும் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி வீட்டில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
வீட்டில் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இது நடந்த சில மணி நேரங்களில் பெங்களூரிலிருந்து சென்னை சென்ற தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தை தடுத்து நிறுத்தி ஒரு கும்பல் தீவைத்தது. அதில் 2 பயணிகள் பரிதாபமாக இறந்தனர்.
செல்வி வீடு மீதான தாக்குதல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் தற்போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விஸ்வ இந்து பரிஷத், ராமசேனா, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் ேசர்ந்தவர்கள் ஆவர். மேலும் 5 பேருக்கும் வலை வீசப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பயணியின் அடையாளம் தெரிந்தது:
இதற்கிடையே பஸ் தீவைப்பு சம்பவத்தில் பலியான இருவரில் ஒருவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவரது பெயர் கருப்பசாமி. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்.
அவரது குடும்பத்தினர் கருப்பசாமியின் அடையாளம் காட்டியுள்ளனர். மற்றொரு பயணியின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications