தமிழகத்தில் கேபிள் டிவி ஸ்டிரைக்
சென்னை:
சன் குழுமத்தின் சன் டிடிஎச் சேவையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் இன்று மாலை வரை ஜெயா, கலைஞர் டிவியைத் தவிர பிற சேனல்கள் எதுவும் தெரியவில்லை.
சன் டிவி நிறுவனம் ஓரிரு நாட்களுக்கு முன்பு டிடிஎச் சேவையை தொடங்கியது. இதற்கு தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சன் டிவியின் டிடிஎச் சேவையால் ஒட்டுமொத்த கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்க்கையும் இருளடைந்து போகும் என அவர்கள் குமுறுகின்றனர்.
சன் டிடிஎச் சேவையை எதிர்த்து சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகம், சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை ஆபரேட்டர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தயாநிதி மாறனையும் அவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
மேலும் சன் டிடிஎச்சை எதிர்த்து கடந்த 3 நாட்களாக சன் குழுமச் சானல்களை சரியாக ஒளிபரப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்ஏறு நான்கு தென் மாநிலங்களிலும் சன் குழுமச் சானல்களை ஒளிபரப்பாமல் ஸ்டிரைக் செய்யப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று நள்ளிரவு முதலே தங்களது ஸ்டிரைக்கைத் தொடங்கி விட்டனர். சென்னை முழுவதும் ஒரு சானலும் தெரியவில்லை. ஆனால் சொன்னது போல சன் குழுமச் சானல்களை மட்டும் ரத்து செய்யாமல் ஒட்டுமொத்தமாக அத்தனை சானல்களையும் ரத்து செய்தனர்.
அதேசமயம், திமுக சார்பு கலைஞர் டிவி மற்றும் அதிமுக சார்பு ஜெயா டிவி ஆகியமை மட்டும் பளிச்சென தெரிந்தன. இந்த சண்டைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத ராஜ் டிவி, மக்கள் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட ஒரு சானலும் தெரியவில்லை.
மதுரை உள்ளிட்ட நகரங்களில் கடந்த 3 நாட்களாகவே ஒரு சானலும் சரியாக தெரியவில்லையாம். பல இடங்களில் கேபிள் வயர்களை திமுகவினர் வெட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சன் குழுமச் சானல்கள் மட்டுமல்லாது ஒரு சானலும் தெரியாத நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், தமிழகத்தைத் தவிர கர்நாடகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த ஸ்டிரைக் நடக்கவில்லை. மாறாக அனைத்துச் சானல்களும் அங்கு பளிச்சென தெரிந்தன.
ஸ்டிரைக் என்று அறிவித்து விட்டு கலைஞர் மற்றும் ஜெயா டிவி சானல்களை மட்டும் ஒளிபரப்புவது ஏன், இந்த சண்டையில் சற்றும் சம்பந்தப்படாத ராஜ் டிவி, மக்கள் டிவி உள்ளிட்ட மற்ற அப்பாவிச் சானல்களையும் ரத்து செய்தது அநியாயமானது என்று பொதுமக்கள் புலம்பினர்.
மேலும் பிற மாநிலங்களில் மட்டும் அனைத்து சானல்களையும் ஒளிபரப்பி விட்டு, தமிழக மக்களை மட்டும் இப்படி ஒரு நிகழ்ச்சியையும் பார்க்க விடாமல், ஒரு செய்தியையுயம் அறிய விடாமல் இருட்டடிப்பு செய்துள்ளது எந்த ஊர் நியாயம் என்று பொதுமக்கள் குமுறினர்.












Click it and Unblock the Notifications