பலத்த பாதுகாப்புடன் சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
சென்னை:
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் நேற்று முதல் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
காசிபுரம், கொட்டிவாக்கம், எண்ணூர், திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் இந்த சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.
இன்று கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் கரைப்பையொட்டி 5000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இன்று திமுகவினர் சென்னையில் வி.எச்.பி., இந்து முன்னணி, பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு பன் மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.