சேது திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இனி போராட்டம் - கருணாநிதி
சென்னை:
வேதாந்திக்கு எதிரான போராட்டம் தொடராது. ஆனால் சேது சமுத்திரத் திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்றக் கோரி திமுகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்துவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அவர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தின் பாதையை மாற்றுவதில், பாலத்தை இடிக்காமல் அதை நிறைவேற்றுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதை வேறு யாரும் தீர்மானிக்கக் கூடாது, பொறியாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
வேதாந்தியின் கொலை மிரட்டலைக் கண்டித்து நடந்தது ஒரு நாள் போராட்டம்தான். அது முடிந்து விட்டது. இனி தொடராது. இனி திமுகவினர் போராட்டம் நடத்துவதாக இருந்தால், அது சேது சமுத்திரத் திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும்.
காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் மெளனமாக இருப்பதற்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது காரணமாக இருக்கலாம். மற்றபடி நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) நினைப்பது போல எங்களுக்குள் வேறு எந்த கருத்து வேறுபாடும் இல்லை, கவலைப்படாதீர்கள் என்றார் முதல்வர்.
நான் ஃபாத்வா விதிக்கவில்லை என்று வேதாந்தி மறுத்துள்ளாரே என்று கேட்டதற்கு, அதுகுறித்து நான் பதில் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications