கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் முன்னாள் ஜன்சங் எம்.பி!
சாகர் (ம.பி):
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ஜன் சங் எம்.பி. ராம் சிங் அஹிர்வார் என்பவர், கிறிஸ்தவ மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளார். தான் ஒரு தலித் என்பதால் பாஜக தன்னைப் புறக்கணிப்பதால் இந்த மத மாற்ற முடிவுக்கு வந்ததாக அஹிர்வார் கூறியுள்ளார்.
1967ம் ஆண்டு சாகர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு ஜன் சங் (பாஜகவின் தாய்க் கட்சி) சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஹிர்வார். 72 வயதாகும் அஹிர்வார், தனது மதமாற்றம் குறித்துக் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்., ஜன் சங் மற்றும் பாஜக ஆகியவற்றிலிருந்து நான் நிறைய மரியாதையை எதிர்பார்த்தேன்.
ஆனால் பாஜகவின் தலித் விரோத கொள்கையில் இன்னும் எந்த மாற்றமும் இல்லை. இது என்னை வருத்தமடைய வைத்துள்ளது. தலித்துகளின் உயர்வுக்காக பாஜக தீவிரமாக பாடுபடவில்லை.
பாஜக நிர்வாகம் என்னை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. நான் பாஜகவில் உறுப்பினராகாவிட்டாலும் கூட ஜன் சங்கின் ஆரம்ப கால உறுப்பினர் என்ற மரியாதையைக் கூட பாஜகவினர் எனக்குத் தர மறுக்கின்றனர்.
இதனால் மனம் வெறுத்துள்ள நான் கடந்த 2 ஆண்டுகளாக சர்ச்சுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளேன். விரைவில் மதம் மாறவுள்ளேன். எப்போது மதம் மாறுவது என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
1963ம் ஆண்டு தீவிர அரசியலுக்கு வந்தேன். தீண்டாமை மற்றும் சாதிப் பாகுபாட்டை ஒழிக்கும் எண்ணத்துடன் அரசியலுக்கு வந்தேன்.
ஆனால் தலித்துகள் இன்னமும் தீண்டத்தகாதவர்களாகவே இருப்பது என்னை வேதனைப்பட வைத்துள்ளது. தீண்டாமைப் பேயின் பிடியில் நானே பலமுறை சிக்கியது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சமூக, அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து நீண்ட நாட்களாக பாஜகவின் மீது நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அவர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால்தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறத் தீர்மானித்தேன்.
எனது வாழ்க்கையின் கடைசிக் காலத்திலாவது நிம்மதியுடனும், புறக்கணிப்பு தளையிலிருந்து விடுபட்டும் கழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார் அஹிர்வார்.